
ஜெ மரணம் குறித்து வெளிமாநிலம், வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சிபிஐ விசாரணைதான் அமைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி 75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதனிடையே சசிகலாவை தவிர யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஒபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் எடப்பாடி தலைமையிலான அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜெ மரணம் குறித்து சிபிஐ தான் விசாரணை நடத்த வேண்டும் எனவும், வெளி மாநிலம், மற்றும் வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், லண்டன் மருத்துவர்கள் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவரகளையும் விசாரிக்க வேண்டும் எனவும், மத்திய அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆணையத்துக்கு அவசர அவசரமாக நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.