
தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதாகவும், தமிழக அரசு கடனில் சிக்கித் தவிப்பதாக தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜனின் ஆய்வறிக்கையை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது-
2017 ஆம் ஆண்டின் ஆளுநர் உரையின் கடைசி நாளான பிப்ரவரி 1ம் தேதி 2016-17 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் பெயரில் அது வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வில் கடந்த 2015-16ம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்த சில திருத்தப்பட்ட மதிப்பீடுகளும், நடப்பு நிதி ஆண்டின் 2016. ஏப்ரல் 1 முதல் 2016,செப்டம்பர் 30, 2016 வரை நிதி செயல்பாடுகளும் ஒப்பீடு செய்யப்பட்டு இருந்தது. வழக்கமாக இந்த அறிக்கையானது நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மழைக்கால கூட்டத்தொடரை அதிமுக அரசு கூட்டவே இல்லை.
இந்த ஆய்வு அறிக்கையில் நிதி நிலைமை முதல் ஆறு மாதங்களில் எந்த அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.
உதாரணமாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட வருவாய் குறைந்துள்ளது, வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டைக்காட்டிலும் மூலதன முதலீடு அதிரிகரித்து, மாநிலத்தின் நிதி நிலைமை சீர்குலைந்து வருவதை அந்த ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களை மூலம், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மாநில நிதி நிலைமை கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது.
1) நடப்பு நிதியாண்டில் (2016-17) கணிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை ரூ. 15 ஆயிரத்து 855 கோடி என்பது கடந்த 13 ஆண்டுகால ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கிறது. இந்த இடைக்கால ஆய்வு அறிக்கையின்படி பற்றாக்குறை என்பது ஆறு மாத காலத்திலேயே 87 சதவீதத்தை அதாவது, ரூ. 13,804 கோடியை எட்டிவிட்டது. இது கணக்கிடப்பட்டுள்ள தொகையை விட மிக அதிகம்.
2) நடப்பு நிதியாண்டின் முதல் அரை ஆண்டை விட, 2-வது அரையாண்டில், ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை, பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி, வர்தா புயல், எண்ணுர் எண்ணெய் விபத்து என இயற்கை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் (அக்டோபர் ’16 முதல் மார்ச் ’17 வரை) மிக மோசமானதாக இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றையும், முதல்வர்கள் மாற்றம் என அரசு நிர்வாகம் முடங்கிவிட்டது.
3) நிதியாண்டில் முதல் அரை ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதன முதலீடான ரூ. 24 ஆயிரத்து 679 கோடி இலக்கை அடையவில்லை. ரூ. 5,166 கோடி மட்டுமே மூலதன முதலீடாக பெறப்பட்டுள்ளது.
4) கடன் மற்றும் வட்டி செலவினங்களிலும் சில நீண்ட கால மாற்றங்கள் இருப்பதை உணர்த்துகிறது.
மாநிலத்தின் நிதி நிலை மற்றும் அதிமுக ஆபத்தான நிதிச் சூழலை தமிழக மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. மேலும், எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் இந்த அறிக்கையை 5 பாகங்களாக விவரிக்கும் சிறு வீடியோ தொடர்களையும் வெளியிடுகிறார். அந்த 5 பாகங்களில்:
1. நிதி நிலை அறிக்கையை எப்படி பகுத்தாய்வது?
2. பொறுப்புமிக்க நிதி மேலாண்மையின் சிறப்புகள்
3. கடந்த பத்து ஆண்டு வருவாய் கணக்கின் செயல்பாடு குறித்து பகுப்பாய்வு
4. கடந்த பத்து ஆண்டுகளின் நிதி கணக்கு செயல்பாடு குறித்து பகுப்பாய்வு
5. தற்போதையை நிதி நிலவரமும், முடிவுகளும்.
தமிழக எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில், மாநிலத்தின் நிதி நிலையை தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது.
ஏற்கனவே பட்ஜெட் விவாதம் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரை ஐந்து நாட்களாக குறைத்த அதிமுக அரசு, இப்போது பட்ஜெட் கூட்டத் தொடரிலும் விவாதத்தை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
அப்படி ஒருவேளை நேர்ந்தால் இதை ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல். ஆகவே இந்த அறிக்கை, வரும் 16-ந்தேதி தொடங்க இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் மீதான விவாதப் பொருளின் உள்ளடக்கத்தை செழுமைப் படுத்திட , உயர்த்திட உதவும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழக அரசின் மோசமான கையாலாகாத நடவடிக்கைகளால் ரூ.30,000 கோடி வரை பட்ஜெட்டில் துண்டு விழ வாய்ப்புள்ளது என அடித்து கூறுகிறார் ஸ்டாலினிடம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ள உலக அளவிலான பொருளாதார நிபுணரும் மதுரை மத்தி திமுக சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பழனிவேல் தியாகராஜன்.