ரூட்டை மாற்றுகிறாரா ஸ்டாலின்…? பிரதமர் மோடி ஆதரவாளருக்கு ‘சூப்பர்’ பதவி…

Published : Nov 13, 2021, 07:40 PM IST
ரூட்டை மாற்றுகிறாரா ஸ்டாலின்…? பிரதமர்  மோடி ஆதரவாளருக்கு ‘சூப்பர்’ பதவி…

சுருக்கம்

தலைமை செயலாளர் இறையன்பு அண்ணனும், பிரதமருக்கு நெருக்கமான அதிகாரியாக கருதப்படும் திருப்புகழுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய பொறுப்பை ஒன்றை அறிவித்துள்ளார்.

சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு அண்ணனும், பிரதமருக்கு நெருக்கமான அதிகாரியாக கருதப்படும் திருப்புகழுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய பொறுப்பை ஒன்றை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக மழை விடாமல் போட்டு தாக்கி வருகிறது.  வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தலைநகர் சென்னை, தென் மாவட்டங்கள் என வகை,தொகை இல்லாமல் மழை மக்களை பாடாய்படுத்தி வருகிறது.

அதிலும் தலைநகர் சென்னையின் நிலைமையோ அந்தோ பரிதாபம் ரேன்ச்சுக்கு இருக்கிறது. மற்ற நகரங்களில் வசிப்போர் புண்ணியவான்கள் என்று டுவிட்டரில் வச்சு செய்யும் அளவுக்கு சென்னை மழை மக்களை கதற வைத்திருக்கிறது.

மழைக்குள் சென்னை, வெள்ளத்தில் சென்னை, மிதக்கும் சென்னை என்று டிசைன், டிசைன் பெயர்களுடன் சமூக ஆர்வலர்களும், வெகு ஜனங்களும் டுவிட்டரில் அதிகார வர்க்கத்தை பிறாண்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் எந்த அரசின் உதவியும் வரவில்லை என்று கதறி கொண்டிருக்க ஆளும் அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் லைன் கட்டி தாக்கி அரசியல் பேசி வருகின்றன.

2015ம் ஆண்டு யார் ஆட்சியில் இருந்தார்  என்று தெரிந்தும், இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையை ஏன் சீரமைக்கவில்லை, உள்ளாட்சி அமைச்சராக இருந்த போது என்ன செய்தார் என்று கேள்வி கேட்டு வரும் அண்ணாமலையை டுவிட்டர்வாசிகள் மீம்சுகளால் போட்டு தாக்கி வருகின்றனர்.

உதவிகள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. கண்டெண்ட் கொடுக்கிறார் அண்ணாமலை என்று மீம்ஸ் மேக்கர்ஸ் (memes makers) அண்ணாமலையின் டுவிட்டரை பாலோ செய்கின்றனர்.

அரசியல் வேண்டாம், ஒதுக்கி வையுங்கள், ஆக்கப்பூர்வமான பணிகளே இப்போது அவசியம் என்று சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் எந்த ஆட்சியாக இருந்தாலும் இனி சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அதற்காக 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்திருக்கிறார்.

இதில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது… இந்த குழுவானது ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் இயங்குகிறது. யார் இந்த திருப்புகழ் என்று யோசிப்பவர்களுக்கு இறையன்பு என்ற பெயரை சொன்னதும் டக்கென்று ஞாபகம் வரும்.

திருப்புகழ் ஐஏஸ், தமிழகத்தின் தலைமை செயலாளரான இறையன்புவின் அண்ணன். இவர் தான் இப்போது 14 பேர் கொண்ட குழுவின் தலைவர். திருப்புகழ் அவ்வளவு எளிதாக கடந்துபோய்விடக் கூடிய அதிகாரி அல்ல என்பது அவரை பணிகளை உற்று பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

2005ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த காலகட்டம். அப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோகராக அமர்த்தப்பட்டவர் திருப்புகழ். பேரிடர் மேலாண்மை துறையில் நெடிய அனுபவம் கொண்டவர் திருப்புகழ். குஜராத் பூகம்ப பாதிப்புகளின் போது சபாஷ் என்று மோடி கூறும் அளவுக்கு சிறப்பு கவனம் பெற்றவர்.

அப்போது தான் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை அறிய இந்தியாவால் அவர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அனைத்து பணிகளையும் ஜெயமாக்கி அவர் நாடு திரும்ப…2017ம் ஆண்டு தேசிய பேரிடம் மேலாண்மை துறை கொள்கை மற்றும் திட்ட ஆலோகராக அமர வைக்கப்பட்டார்.

பிரதமர் மோடியின் குட்புக்கில் இப்போதும் இருக்கும் திருப்புகழ் தான் தற்போது சென்னையில் மழைநீர் நிரந்தரமாக தேங்க கூடாது என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டு உள்ள 14 பேர் கொண்ட குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

மழையால் தத்தளிக்கும் தலைநகர் சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறது, அதை தடுக்க மற்றும் தவிர்க்க என்ன வழி, எதிர்கால நடவடிக்கைககள் பற்றி இந்த குழுவானது ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும்.

பிரதமர் மோடியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள ஒருவருக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய பொறுப்பு வழங்கி இருப்பது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவரின் தம்பி இறையன்பு தமிழக தலைமை செயலாளர் ஆக உள்ளார், இவர் வல்லுநர் குழுவின் தலைவராக இருக்கிறார் என்று பேச்சுகள் எழுந்தன.

மோடியின் நேரடி தொடர்பில் இருப்பதாக கூறப்படும் அவரை குழுவின் தலைவராக நியமித்துள்ளாரே, ஒருவேளை ரூட்டை மாற்றுகிறாரா ஸ்டாலின் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஆனால் இந்த ஹேஸ்யங்களை வலது, இடது என இரண்டு கைகளினாலும் புறம்தள்ளும் அதிகாரிகள் தரப்பு ஒரு விஷயத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லி வருகிறது.

தலைநகர் சென்னை இனி எந்த சந்தர்ப்பத்திலும் மழை, வெள்ள பாதிப்பால் தத்தளிக்கக் கூடாது என்பது முதல்வரின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காகவே திருப்புகழ் நியமிக்கப்பட்டார் என்றும் இதில் அரசியல் இல்லை என்றும் கூறுகின்றனர். ஆக…. மக்களுக்கான அரசு என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என்பது தான் அவர்களின் கருத்தாக இருக்கிறது…!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!