என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அண்ணாமலைதான் பொறுப்பு.. ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் குமுறல்.

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2021, 7:04 PM IST
Highlights

தொடர்ந்து இந்து கோயில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்,  இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்றும், அதேபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு அண்ணாமலைதான் பொறுப்பு என்றும், வைணவ பக்தரும், அர்சகருமான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் படடர் தோப்பைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன், இவர் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பழங்கால சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த வழக்கு மூலம் பிரபலமானார் அவர். 

தொடர்ந்து இந்து கோயில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்,  இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்றும், அதேபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார் நரசிம்மன். அடிக்கடி கோயில்கள் குறித்தும் அதன் நிர்வாகிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சைகளுக்கு பெயர் போனவராகவும் ரங்கராஜன் நரசிம்மன் இருந்து வருகிறார். சமீபத்தில் கோயில் நிர்வாகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் என்பவர் அளித்த புகாரின் பேரில், ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்துக்களுக்காகவும், கோவில் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் அவர், தற்போது திடீரென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 

அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி நவம்பர் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டினார், அதை எடுத்து கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள சிவன் கோயிலில் வழிபாடு நடத்தினார், சிவபெருமானுக்கு ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தார், அந்த வழிபாட்டு நிகழ்ச்சியை பாஜக தலைவர்கள், பிரபல கோயில்களில் நேரலையில் கண்டு தரிசனம் செய்தனர். இந்த செயலுக்கு அர்ச்சகர் ரங்கராஜன் நரசிம்மன் கண்டனம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பாஜகவை தட்டிக் கேட்டதற்காக தனக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தன் மீது எந்த தாக்குதல் நடந்தாலும் அதற்கு அண்ணாமலை தான் பொறுப்பு என்றும், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- நவம்பர் 5ஆம் தேதி,  ஸ்ரீரங்க அரங்கநாதன் சுவாமி கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது கட்சிக்காரர்களுடன், தாயார் சன்னதி முன்பிருந்த கருத்துரை மண்டபத்தில், ஒரு எல்சிடி ஸ்கிரீன் மற்றும் ஸ்பீக்கர் வைத்து பாரத பிரதமர் மோடி அவர்களுடைய பேச்சினை கோவிலுக்குள்ளே ஒளிபரப்பினார்.பாஜகவின் ஆதரவாளர்கள் குறிப்பாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அண்ணாமலையில் வெறியர்கள் என்றே சொல்லலாம், அவர்கள் இது ஒரு மதம் சார்ந்த விஷயம் என்பதால் இதை ஒளிபரப்பு செய்வதில் என்ன தவறு என என்னிடம் கேள்வி கேட்டனர்.

அவர்கள் கொஞ்சமாவது சட்டத்தை தெரிந்து கொண்டு பேசவேண்டும், இன்னும்கூட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பாஜக தொண்டர்கள் என்னை தொலைபேசி வாயிலாக அழைத்து மிரட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் என்னை ட்ரோல் செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலே அவர்களுக்கு அளவில்லா ஆனந்தம் கிடைக்கிறதென்றால் போகட்டும், ஆனால் ஒரு தனி மனிதனை மிரட்டுவது சட்டப்படியான குற்றம், இதற்கு முழுப்பொறுப்பையும் அண்ணாமலை அவர்கள்தான் ஏற்க வேண்டும், என் மீது எவராவது தாக்குதல் நடத்தினால் அதற்கு முழு பொறுப்பும் அண்ணாமலை தான்.  இதையே என்னுடைய வாக்கு மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் தொடர்ந்து அவர்களிடமிருந்து எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. உயிர் போவதை பற்றி கவலைப்படுகிற ஒரு சாமானிய மனிதன் அல்ல நான், உயிர் எப்போது போகும் என்று காத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன்.

இருக்கும் காலத்தில் பெருமாளுக்கு அடிமையாக இருந்து பெருமாள் இவன் நம் பையன் என்று சொல்வானா என்று ஏங்கி கிடப்பவன், எல்லா வைணவர்கள் போலவும் மரணமடைந்தால் வைகுண்டத்தை எதிர்பார்த்து காத்திருப்பவன், அனுதினமும் திருமாலின் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருப்பவன், என்னுடைய வாழ்க்கையின் முடிவு குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. ஆனால் நான் கவலைப்படுவதாக நீங்க நினைத்தால் ஏமாற்றமே அடைவீர்கள், சிலர் என்னைத் தொலைபேசியில் மிரட்டுகின்றனர், வெளியில் போகும்போது லாரியை வைத்து தட்டி விடுவார்களாம், என்னை அழிப்பதினாலேயே அண்ணாமலை பெரிய ஆளாக்கி விட முடியும் என்றால், செய்து பார்த்து நடப்பதை ஏற்றுக்கொள் . எதுவுமே அவனுடைய செயல் என்று வாழ்பவன், நான் எதைப் பற்றியும் கவலைப்படுபவன் அல்ல. இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

 

click me!