என் மீது ஆதாரமற்ற புகார் கூறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. மீண்டும் சீனுக்கு வந்த கேடிஆர்.

Published : Nov 13, 2021, 05:53 PM IST
என் மீது ஆதாரமற்ற புகார் கூறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. மீண்டும் சீனுக்கு வந்த கேடிஆர்.

சுருக்கம்

என் மீது ஆதாரமற்ற புகார் கூறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக தோல்விக்குப் பின்னர் அரசியல் நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் தீவிர அரசியல் களத்திற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

என் மீது ஆதாரமற்ற புகார் கூறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக தோல்விக்குப் பின்னர் அரசியல் நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் தீவிர அரசியல் களத்திற்கு திரும்பியுள்ளதாக  கூறப்படுகிறது. அதிமுக கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவரை அதிரடியாகப் பேசி எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்து வந்தார் கே. டி ராஜேந்திர பாலாஜி,  எவராக இருந்தாலும் தரைமட்டத்திற்கு இறங்கி அவர்களை கடுமையான வார்த்தைகளால் போட்டு தாக்குவதில் வல்லவராக வலம் வந்தார் ஆவர், 

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி துணைத்தலைவர் பதவி வகித்த கே.டி ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011ஆம் ஆண்டு சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே மாவட்ட செயலாளர் பதவியும் கிடைத்தது, அமைச்சர் பதவியும் தேடி வந்தது. ராஜேந்திர பாலாஜி என்று இருந்த தனது பெயரை, நியூமராலஜி அடிப்படையில் கே.டி ராஜேந்திர பாலாஜி என மாற்றிக் கொண்டார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சி தலைவர்களையும் மிக மோசமாக தரம் தாழ்ந்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர், செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் பெரும் சர்ச்சையாக மாறியது. மோடி எங்கள் டாடி என்று அவர் பேசியது அரசியலில் மறக்க முடியாத வார்த்தையாகவும் இருந்து வருகிறது.  அதிமுக பாஜகவுக்கு அடிமையாகிவிட்டது என திமுக விமர்சித்த நிலையில் பாஜக தலைவர்களையே விஞ்சும் அளவுக்கு திமுகவை சரமாரியாகத் தாக்கி பின்னிப் பெடல் எடுத்தார் ராஜேந்திரபாலாஜி. 

ராஜேந்திர பாலாஜியின் துடுக்கு பேச்சு  ஒரு கட்டத்தில் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியது, பலமுறை அவரை எச்சரித்தும் அவர் அதற்கெல்லாம் கட்டுப்படவில்லை என்றே கூறலாம். திமுகவுக்கு கட்டம் சரியில்லை, முதல்வர் ஸ்டாலினுக்கு ராசி இல்லை அவர் முதல்வராக முடியாது, என மேடைதோறும் முழங்கி வந்தார் அவர். ஆட்சியில் இருந்தபோது ஆவின் பாலில் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது எனவே ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என புகார்களும் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் டார்கெட் கே.டி ராஜேந்திர பாலாஜிக்குதான் என கூறப்பட்டு வந்த நிலையில், திமுக தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது, அதைத்தொடர்ந்து கே.டி ராஜேந்திர பாலாஜி எதிலும் தலைகாட்டாமல் அடக்கி வாசித்து வந்தார். இந்நிலையில் ஆவின் முறைகேடு வழக்கு அவர் மீது நடந்து வருகிறது. அதில் விரைவில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாத காலம் வரை எதிலும் தலை காட்டாமல் இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி தன் மீது ஆதாரமற்ற புகார் கூறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் கூறியிருப்பதாவது:- பச்சை தமிழர் காமராஜர் பிறந்த விருதுநகர் மண்ணில் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் பயணித்த வழியில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், அரசியலில் பொதுநல சிந்தனையோடு பணியாற்றி வருகிறேன், இன்றுவரை உள்ளாட்சி முதல், அமைச்சர் வரை அரசு பதவிகளில் சட்ட விதிகளுக்கு முரணாக நான் செயல்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்படிப்பட்ட நேர்மையான அரசியல்வாதி என்பது என்னோடு பழகியவர்களுக்கும், என்னுடைய தொண்டர்களுக்கும் தெரியும், என்னோடு இருக்கும் தொழில் அதிபர்களுக்கும் தெரியும், அடிமட்ட தொண்டனாக தொடங்கிய அரசியல் மற்றும் கட்சிப் பொறுப்புகளில் பணியாற்றியபோது என் மனசாட்சிக்கு நேர்மையாகவும், நாணயமாகவும் யாரும் என் மீது விரல் நீட்டி குற்றம் சுமத்த முடியாதபடி அரசியலில் பயணித்து வருகிறேன். எனது அரசியல் வளர்ச்சியை கண்டு காழ்ப்பணர்ச்சி கொண்டவர்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தவறான செய்திகளை தொடர்ந்து திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை, ஆதாரம் இருந்தால் சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கட்டும், நானும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

முகாந்திரம் இல்லாமல் என்னை அரசியலில் நேரில் எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் தூண்டுதல் செய்து எனக்கு எதிராக சதி வலை பின்னி வருகிறார்கள். தொடர்ந்து தவறான பாதையில் எனக்கு எதிராக அநியாயமாக ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறேன். குறிப்பாக விஜயா நல்லதம்பி என்பவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பது குறித்து பத்திரிக்கை வாயிலாக நிறையவே அறிந்துள்ளேன். ஏராளமான புரோக்கர்களை கையில் வைத்துக்கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி கும்பலாக செயல்பட்டு பல்வேறு வழக்குகளில் அவர் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடி பேர்வழிகளின் நம்ப வேண்டாம், எனது பெயரைக் கூறி அவர் தப்பிக்க நினைக்கிறார், விஜய் நல்ல தம்பிக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் செய்த தவறை மறைப்பதற்கு ஏதுவாக ஒரு விஐபி மீது பழி சுமத்துவது விஜயா நல்ல தம்பிக்கு வாடிக்கையாக உள்ளது. பல்வேறு கட்சிகளில் இருந்து மோசடியில் ஈடுபட்டு அந்த கட்சிகள் மீது குற்றம் சொல்வதை, நல்லதம்பி வாடிக்கையாக வைத்துள்ளார். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!