#CMStalin | சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையின் காரணமாக ஏற்படுள்ள வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்களை தடுப்பதற்கும் மக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வதற்கும் தமிழக அரசு எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கை யவரும் அறிந்ததே. கடந்த ஒருவார காலமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் துரிதமாக செயல்ல்பட்டதன் காரணமாக பெரும் சேதங்கள் தடுக்கப்பட்டது. இன்று காலை முதல் கடலூர், நாகை, மயிலாடுதுரை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தேன். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, மூலம் ஆரம்பகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டது. குறிப்பாக டெல்டா பகுதிகளில் நேரில் சென்று அரசுக்கு ஆய்வறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் அளித்த அறிக்கையில், நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 17 லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய கணக்கெடுப்பின் படி, 62 ஆயிரத்து 652 ஹெக்டர் பரப்பளவு நீரில் மூழ்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தேங்கி இருக்கும் நீரை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக உள்ளாட்சிதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இயன்ற அளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர்களை காப்பாற்ற முடியாத நிலங்களில் உழவர்கள் மறுநடவு செய்ய தேவையான அனைத்து உதவிகளுடன் செய்யப்படும். மேலும் கிராமம் வாரியாக முழுமையான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதும் விரைவில் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெரும் மழையினால் முழுமையான பயிர்சேதம் அடைந்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை புரிந்துக்கொண்டு 65 கோடி மதிப்பீட்டில் 4000 கி.மீ தூர்வாரப்பட்ட காரணத்தினால் காவேரி நீர் கடைமடை வரை சென்றது. அதுமட்டுமல்லாமல் தற்போது தேங்கியுள்ள நீர் வடிவதற்கும் அது பேருதவியாக இருப்பது என்பதை இப்பகுதி மக்கள் குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவர். மேலும் மேலாண்மையை ஊக்கப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் அரசு மேற்கொண்ட காரணத்தில் குருவை சாகுபடி எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 4.9 லட்சம் ஹெக்டர் பயிர் சாகுபடி நடைபெற்று நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உழவர்களை கண் போல் காப்பாற்றும் அரசு திமுக அரசு. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் 6,7,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மிக அதிக மழை பெய்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் நோக்கில் கடந்த 4 நாட்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 220 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டன. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. தேவையான நேரங்களில் உபரி நீர் முறையாக வெளியேற்றப்பட்டது.
2015ல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட காரணத்தால் சென்னை எந்த அளவிற்கு சேதமடைந்தது என்பது யாவரும் அறிந்ததே. அத்தகைய அவலம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக துல்லியமாக கவனிக்கப்பட்டு சரியான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டது. கடந்த ஒரு வார காலமாக பெய்த மழையால் 2888 தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 169 முகாம்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் தற்போது வரை 44 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 90 ஆயிரத்து 140 பேர் பயன்பெற்றுள்ளனர். அதிமுக ஆட்சி சரியாக செயல்படாத காரணத்தால் தான் அப்போது அத்தகைய அவலம் ஏற்பட்டது. எனினும் கடந்த 4 மாதங்கள் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. பருவமழை காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் வெள்ள நீர் தேங்குவதை சரிசெய்ய தமிழக அரசு சார்பில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி திருபுகழ் தலைமையில் இந்த மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை மழை நீரால் பாதிக்கபடாத வண்ணம் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும். அதன் அடிப்படையில் பருவமழை காலங்களில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடும். இவ்வாறு தெரிவித்தார்.