
ஹிந்து மதத்தைக் காப்பாற்று வதற்காகவே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றதாக போலீசாரிடம் சிக்கிய ஸ்ரீராம் சேனா இயக்கத்திச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வைச் சேர்ந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவர், சாதி-மதப் பாகுபாடுகள் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். முற்போக்குச் சிந்தனையாளர். துணிச்சல் மிக்கவர்.அவரை, பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரிலுள்ள அவரது வீட்டின் முன்பாகவே மர்ம நபர்கள், கடந்த 2017 செப்டம்பர் 5-ஆம் தேதி சுட்டுக் கொன்றனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இப்பிரிவினர், நீண்ட விசாரணைக்குப் பிறகு பரசுராம் வக்மோர் உள்பட மொத்தம் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பரசுராம் வாக்மோர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நமது மதத்தை காப்பாற்றுவதற்காக ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என 2017-ஆம் ஆண்டுமே மாதம், ஒரு குழு என்னிடம் வந்தது.
ஆனால், நான் யாரை கொலை செய்யவேண்டும், எதற்காக அவரைக் கொலை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெரிவிக்கவில்லை; ஆனால், இந்த கொலைக்காக எனக்கு மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது; செப்டம்பர் 3-ஆம் தேதி என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இருவேறு அறைகளில் தங்க வைத்தார்கள்; செப்டம்பர் 5-ஆம் தேதி மாலையில் என் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, கவுரி லங்கேஷ் வீட்டிற்கு முன்பு என்னைக் கொண்டுபோய் விட்டனர்; கவுரி லங்கேஷ் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்; நான் மெதுவாக இருமினேன்; அப்போது என்னைப் பார்த்து லங்கேஷ் திரும்பினார்; உடனே, அவரை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டேன்.
அன்றிரவே நான் பெங்களூருவை விட்டும் வெளியேறிவிட்டேன்; ஆனால், தற்போது லங்கேஷை கொலை செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன்’.இவ்வாறு பரசுராம் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஆனால், இந்த வாக்குமூலத்தில் பரசுராம் முழு உண்மைகளையும் கூறியதாக தெரியவில்லை; குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். கவுரி லங்கேஷ் மட்டுமல்ல, பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகிய மூவரும் ஒரே நபரால்தான் கொல்லப்பட்டுள்ளனர்; பயன்படுத்தப் பட்ட துப்பாக்கியும் ஒரே ரகத்தைச் சேர்ந்தது என்று ஏற்கெனவே உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு பார்க்கையில், கவுரி லங்கேஷை மட்டும் கொலை செய்ததாக பரசுராம் கூறுவதில் சந்தேகம் எழுவதாக அவர்கள் கூறுகின்றனர்.