
சசிகலாவின் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ஓ.பி.எஸ்.அணி வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு குழப்பத்தை அதிமுக சந்தித்துள்ளது. ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுக என்ற மாபெரும் கட்சி சசிகலா, ஓ.பி.எஸ்., என இரண்டு அணிகளாக சிதறுண்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் அதிமுக புரட்சித் தலைவி என்ற கட்சியின் பெயரில் ஓ.பி.எஸ். அணியும், அதிமுக அம்மா என்ற பெயரில் சசிகலா அணியும் களத்தில் குதித்துள்ளன. தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரனும், இரட்டை மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடும் மதுசூதனனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்.அணி வேட்பாளர் மதுசூதனன், தமிழகத்தில் இருந்து சசிகலாவின் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தனக்கு போட்டியே இல்லை என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக ஆர்.கே.நகரில் ஏற்கனவே தான் இருந்ததை சுட்டிக் காட்டிய அவர், தனக்கும் திமுகவுக்கும் தான் நேரடிப் போட்டி என்றார்.