
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று மட்டும் 72 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த இடைத்தேர்தலில் ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனன், சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட பலர் போட்டி இடுகின்றனர். அதற்கான வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
கடைசி நாளான இன்று மட்டும் 72 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் போட்டியிட இதுவரை 127 வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுதாக்கல் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
வேட்பு மனுதாக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் மார்ச் 27 ஆம் தேதிக்குள் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.