
இரட்டை இலைச் சின்னம் முடக்கம், கட்சியின் பெயரை பயன்படுத்த தடை என தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு சந்தேகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக தங்களுக்கே என்று சொந்தம் கொண்டாடிய சசிகலாவுக்கும், ஓ.எஸ்.எஸ்.க்கும் தேர்தல் ஆணையம் நேற்றிரவு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இரு தரப்பும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்துள்ள ஆணையம், சசிகலாவுக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரட்டை மின்கம்பத்தையும் சின்னமாக ஒதுக்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பதாகவே தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சசிகலா தரப்போ கடும் விரக்தியில் உள்ளதாகவே தெரிகிறது. கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு நினைப்பதாக அக்கட்சி உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே சசிகலாவுக்குச் சொந்தமான ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் இன்று காலை முதலே பா.ஜ.க.வுக்கு எதிரான காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.