
அதிமுக, அமமுக மீண்டும் இணைக்க வேண்டும் என்று சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய பாஜக வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா இரு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஓகே சொன்னாலும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை, அதிமுகவில் சேர்க்க வேண்டாம் கூட்டணியிலாவது அமமுக இணைக்க வேண்டும் என பாஜக கூறியது, இதனையும் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை இதனால் அதிமுக ஓட்டுகள் இரண்டாக பிளவு பட்டு தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் வாங்க முடியாமல் தோல்வி அடைந்தது. இதனால் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்தது.
கொங்கு மண்டலத்தில் மட்டும் பரவலாக வெற்றியைப் பெற்ற அதிமுக, தென் மாவட்டங்களில் முழுமையாக வெற்றி வாய்ப்பை இழந்தது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டத்தில் போராடி தான் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. தென் மாவட்டங்களில் சசிகலாவின் சமுதாயம் அதிகமாக இருப்பதன் காரணமாக தான் அதிமுக வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் மாற்று அணிக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து அடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதால் அதிமுக அமமுக இணைப்பது குறித்து வெளிப்படையாகவே கட்சி நிர்வாகிகள் பேச ஆரம்பித்துள்ளனர் இந்த நிலைதான் தேனி மாவட்ட அதிமுகவினர் சார்பாக ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில்.சசிகலாவை, தினகரன் கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.இதனையடுத்து நேற்று தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கூறப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் செம்மலை சேலம் மாவட்ட நிர்வாகி இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து. நேற்று இரவு நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்து சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செழியன், குறிஞ்சிப்பாடி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம், ஓமலூர், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர்களும், எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டடது. இன்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இரு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள நிலைமையில் அதிமுக இரண்டு பிரிவுகளாக உள்ளது. தென் மாவட்ட அதிமுக என்றும் கொங்கு மண்டல அதிமுக என உள்ளது. இப்படி இரண்டு அணிகளாக பிரிந்து ஆலோசனை நடத்துவது அதிமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த தலைமையை ஏற்க வேண்டும் என்ற குழப்பத்தில் அதிமுகவினர் உள்ளனர்.