சசிகலாவின் ஒன்றுவிட்ட சித்தப்பாவில் ஆரம்பித்து பத்துவிட்ட பெரியப்பா வரைக்கும் எல்லோரையும் தேடிப்பிடித்து ரெய்டு செய்தார்கள். ஆனால் 2011-க்கு முன்பு வரை மேற்கு தமிழகத்தின் அ.தி.மு.க. மேலாளராக இருந்த ராவணனை மிஸ் செய்தது அக்கட்சியினருக்கே ஆச்சரியம்.
இதிகாச ராவணனுக்காவது பத்து தலை. ஆனால் அ.தி.மு.க.வின் கலியுக ராவணனுக்கு பக்கம் பக்கமாய் தலை. சிம்பிளாய் சொல்வதானால் அவரை ஜெ மற்றும் சசியின் மறு உருவமாய்தான் பார்த்தார்கள் அ.தி.மு.க.வினர். அந்த பெயரை கேட்டாலே நடுநடுங்கினர் ஒரு காலத்தில் ராவணன் நினைத்தால் ஒரு வார்டு செயலாளர் கூட ராஜ்யசபா எம்.பி.யாகலாம், ஒரு ராஜ்யசபா எம்.பி. கூட முன்னாள் அ.தி.மு.க. உறுப்பினராகலாம். அந்தளவுக்கு வீரியமும், காரியமுமாய் இருந்த ராவணனை 2011ல் சசி டீமை ஒதுக்கி வைத்தபோது கைது செய்ய உத்தரவிட்டார் ஜெ., கைது மட்டுமா செய்தது போலீஸ்.
விசாரிக்கிறேன் பேர்வழி என்று கூட்டிப்போய் ‘விலா’எலும்பு வரை சிறப்பித்துவிட்டார்கள்.
சிறை மீண்ட ராவணன் அதன் பிறகு கட்சிக்குள் பெரிதாய் தலைகாட்டவில்லை. சசி அ.தி.மு.க.வில் உச்சம் சென்ற பிறகும் கூட ராவணன் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கவேயில்லை.
சசிகலாவின் மருமகன் முறையாகும் இந்த ராவணனைத்தான் கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டது ரெய்டு க்ரூ. இதற்கு ஆளும் அணியை சேர்ந்த சிலரின் கரிசனப்பார்வையே காரணம் என்று சிலர் காரணம் கூற, சிலரோ ‘கவிழ்த்துப் போட்ட வெற்று டப்பாவுல என்ன தேடி என்ன கிடைக்க போவுது? அதான் ஐ.டி. துறையே கண்டுக்கலை அவரை.’ என்கிறார்கள் நமுட்டுச் சிரிப்பாய்.
விவேக் வீட்டின் டிரெயினேஜ் வரை நோண்டுன இன்கம்டாக்ஸ் என்னோட பேங்க் டீடெயிலை கூட கண்டுக்கலையே! அவ்வளவுதானா நம்ம அதிகாரம்? என்று தனது நெருங்கிய சகாக்களிடம் லேசாய் வருத்தப்பட்டாராம். ‘கண்டுக்காத வரைக்கும் நல்லதுன்னு நினைச்சுக்கோப்பா’ என்று அவர்கள் அதிர்ந்து அட்வைஸினார்களாம்.
ராவணனுக்கு இப்போது புரிந்திருக்கும்...பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரைதான் பாம்புக்கு மரியாதை என்பதும், பல்லு போன பாம்பை பார்த்து பலருக்கு பயமிருக்காது என்பதும்.