
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு ஒருபோதும் செயல்படாது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்ட ஆட்சியருடனும் காவல் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோவையில் ஆளுநர் ஆய்வு பணியில் ஈடுபட்டது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் இல்லை என்றும் மாநில அரசின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு ஒருபோதும் செயல்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மாநில சுயாட்சியை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் ஆளுநர் ஆய்வு நடத்திய சாதாரண விஷயத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
மாநில உரிமைகளை அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.