
ஆர்கே நகர் தொகுதி ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தெரியாமல் மாபியா கும்பலில் இருந்துவிட்டோம். அவர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொண்ட பிறகு, அதில் இருந்து வெளியேறினோம்.
ஓ.பி.எஸ். அமைதியான மனிதர். நியாயமானவர். நல்ல மனிதர். அவருக்கு கோபம் இருக்காது. அதனாலேயே அவருடன் நான் இணைத்து கொண்டேன். எங்களது வெற்றி பயணம் தொடங்கிவிட்டது.
ஜெயலலிதா குடும்ப ஆட்சிக்காக தர்மயுத்தம் நடத்தினார். ஆனால், அவரது மறைவுக்கு பின்னர், அதிமுகவை ஒரு குடும்பமே கைப்பற்ற நினைக்கிறது. துடிக்கிறது.
ஏற்கனவே சசிகலா குடும்பத்தையும், உறவினர்களையும் ஜெயலலிதா வெளியேற்றினார். ஆனால், அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால், சசிகலாவை போயஸ் கார்டன் உள்ளே சேர்த்தார்.
ஆனால், அவரை வேலை செய்யும் உதவியாளராக தான் ஜெயலலிதா சேர்த்தார் தவிர, கட்சியையும் ஆட்சியையும் தனக்கு பின்னர் வழி நடத்துவதற்கு கிடையாது.
ஜெயலலிதா ஜெயிலுக்கு போவதற்கு காரணமே சசிகலாதான். இந்த மாபியா கும்பலால்தான் அவர் மீது வீண் பழி வந்தது.
ஜெயலலிதாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை, சசிகலா சாகடித்தார் என்பதில் மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மக்கள், சசிகலா மீது கொதிப்படைந்து இருக்கிறார்கள்.
விரைவில் அதிமுக, தலைமை அலுவலகம், கட்சி, சின்னம் ஆகியவை கைப்பற்றுவோம். அது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.