மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா.? அமைச்சர்கள் சொல்வது ஒன்று, நடப்பது வேறு.! திமுகவை இறங்கி அடிக்கும் சசிகலா

By Ajmal KhanFirst Published Nov 7, 2022, 10:42 AM IST
Highlights

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
 

தமிழகத்தில் கன மழை

தமிழகத்தில் பெய்த மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக அமைச்சர்களும், மாதகர மேயரும் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது, மாநகர மக்கள் தற்போது மகிழ்ச்சியோடு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சூழ்த்து இருந்த காரணத்தால் மிகவும் பாதிப்படைந்து வீட்டிற்குள் வந்த கழிவுகளை சுத்தம் செய்ய தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் கொசு தொல்லை அதிகரித்து மக்கள் நிம்மதியிழந்து இருக்கிறார்கள். சென்னையில் எங்குபார்த்தாலும் சாலைகள் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை, ஆற்காடு பிரதான சாலை போன்ற பகுதிகளில் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தமுடியாதவகையில் மிகவும் மோசம் அடைத்து இருக்கிறது. 

இந்துக்களை இழிவுப்படுத்தும் புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்..! உடனடியாக கைது செய்ய வேண்டும் - பாஜக

மோசமான சாலைகள்

குறிப்பாக மூலக்கடை, பெரம்பூர் வியாசர்பாடி, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் மக்கள் பயன்படுத்தமுடியாத வகையில் இருக்கின்றன. மக்கள் இருசக்கர வாகனத்தில்கூட பயணம் செய்யமுடியவில்லை. அதேபோன்று ஆட்டோ போன்ற வாகனங்களை செலுத்தமுடியாத சூழ்நிலை உள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், அரசு மருத்துவ முகாம்களை நடத்துவதாக திமுகவினர் சொல்கின்றனர். அவ்வாறு செயல்படுத்தப்படும் மருத்துவ முகாம்களை ஒன்றிரெண்டு குறிப்பிட்ட பகுதிகளோடு நிறுத்திவிடாமல் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகள் பாதிப்பு

சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளிலும், வெளிமாவட்டங்களிலும் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை திமுக தலைமையிலான அரசு கவனத்தில்கொண்டு உடனே சரிசெய்யவேண்டும். குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி அருகே சத்தைப்பகுதி சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. சுழிவுதீர் வெளியேற வழியில்லாமல் குட்டை போல காணமுடிகிறது. இதை உடனே சரிசெய்திடவும், மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள். அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விளைநிலங்களில் பயிர்கள் முற்றிலும் மூழ்கி சேதமடைந்து இருப்பதனால், விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் நாகை மாவட்டத்தில் 45,000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடந்து பெருமளவில் அறுவடை பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு கொள்முதல் நிலையங்கள் நெல்லின் அதிகமான ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் காலதாமதமின்றி. கொள்முதல் செய்து அவற்றை உடனே அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி

அதேபோன்று, இந்நேரங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கிட வேண்டும். மேலும் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் பட்சத்தில், அதை மாணவச்செல்வங்களுக்கு முன்கூட்டியே அறிவித்து, அவர்களுக்கு எந்தவித சிரமும் ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மழைக்காலங்களில் அம்மா உணவகத்தின் மூலமாக உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்து மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு அளித்திட வேண்டும். அதேபோன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை அளித்து மக்களை பாதுகாத்திட வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கின்றன. அதேபோன்று, வரும் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அது மேலும் வலுவடையக்கூடிய சூழல் நிலவுவதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே திமுக தலைமையிலான அரசு மெத்தனமாக இருக்காமல் "வரும் முன் காப்போம்" என்பதை மனதில் வைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதாக அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

உருவாகிறது புதிய புயல்..? எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

click me!