
சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டன் சென்று சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அங்கிருந்த அனைவரும் சின்னம்மா பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியபோது இவர் மட்டும் சசிகலா என பெயரை சொல்லி வேண்டுகோள் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா தரப்பு மீண்டும் சற்று ஒதுக்கி வைத்திருந்தது.
அதிமுகவிக்கு எதிராக தீபா கூட்டம் சேர்த்ததையடுத்து, சைதை துரைசாமியை தக்க வைத்துக் கொள்ள அவருக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
பின்னர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்ற போது, இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிக்கை விட்டார். இந்த செயலும் சசிகலா தரப்புக்கு அதிருப்தியை அளித்தது,
இதனையடுத்து சைதை துரைசாமி கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்நிலையில் டி.டி.வி. தினகரன் நடத்திய கழக நிர்வாகிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை சைதை துரைசாமி புறக்கணித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் சைதை துரைசாமியின் பெயரும் இருந்தது, ஆனால் தனக்கு கால்வலி அதனால் வரமுடியாது என தகவல் அனுப்பிவிட்டு, கோவில் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.
இதனால் விரைவில் ஓபிஸ் அணிக்கு சைதை துரைசாமி மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.