
தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்களை தீபா சந்திக்க மறுத்ததால் அவரது வீட்டின் முன் தீபாவின் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜெ. மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை அதிமுகவின் விடிவெள்ளியாக பார்த்தனர் அக்கட்சியின் தொண்டர்கள்.
அதற்கேற்றாற்போல் தொடர்ந்து ஆரவாரங்களை எழுப்பியபடி பல்லாயிரக்கனக்கான தொண்டர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதற்கான பொறுப்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார் தீபா.
ஆனால் நியமனத்தில் ஏற்பட்ட குழப்பங்களாலும், சமீபத்தில் தீபாவின் கணவர் மாதவன் பேட்டியாலும் பேரவை கலகலக்க தொடங்கியுள்ளது.
இதனால் தீபா ஆதரவளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் தீபாவை சந்தித்து பேச தி.நகரில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
ஆனால் தீபா அவர்களை சந்திக்க இயலாது என்று கூறி விட்டார்.
இதனால் கோபமடைந்த ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து தீபாவின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான ஜாகிர் உசேன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
“பல நாட்களாக தீபாவை சந்தித்து பேச முயற்சி செய்கிறோம், ஆனால் சந்திக்க முடியவில்லை. போயஸ் கர்டன் போல இங்கயும் ஒரு கும்பல் இருந்து கொண்டு தீபாவிடம் பேச விடாமல் தடுக்கின்றனர்” என்று கூறினார்.