மா.சுவை ஓவர் டேக் செய்த சைதையார்..! சென்னை சைதாப்பேட்டையின் அதிரி புதிரி கள நிலவரம்..!

By Selva KathirFirst Published Mar 28, 2021, 11:10 AM IST
Highlights

சென்னை திமுகவின் கோட்டை என்று செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு ஓட்டை போடும் வகையில் சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தீயாய் வேலை செய்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சென்னை திமுகவின் கோட்டை என்று செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு ஓட்டை போடும் வகையில் சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தீயாய் வேலை செய்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு வரை திமுக கோட்டையாக இருந்த சைதாப்பேட்டை தொகுதியை 2006ம் ஆண்டு அதிமுக கைப்பற்றியது. 2011 தேர்தலிலும் இந்த தொகுதியில் அதிமுக தான் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த 2016 தேர்தலில் தவறான வேட்பாளர் தேர்வால் சைதாப்பேட்டையை திமுகவிடம் அதிமுக பறிகொடுக்க நேர்ந்தது. சைதாப்பேட்டையில் கடந்த தேர்தலில் மா.சுப்ரமணியத்தை திமுக களம் இறக்கிய நிலையில் அதிமுக சார்பில் பொன்னையனை ஜெயலலிதா களம் இறக்கினார். இதனால் சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியம் எளிதாக வென்றிருந்தார். கடந்த முறையே சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த செந்தமிழனை ஜெயலலிதா வேட்பாளாராக்கியிருந்தால் மா.சுப்ரமணியத்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

இதனை உணர்ந்து தான் இந்த முறை அதிமுக மிக மிக பலமான வேட்பாளராக சைதை துரைசாமியை களம் இறக்கியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் மட்டும் அல்ல சென்னை கடந்து தமிழகம் முழுவதும் ஏன் இந்திய அளவில் சைதை துரைசாமியின் பெயர் பிரபலம். அதற்கு காரணம் கடந்த பல ஆண்டுகளாக அவர் செய்து வரும் கல்விச் சேவை தான். சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மூலம் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இது மட்டும் அல்லாமல், சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் சைதை துரைசாமி செய்து கொடுத்துள்ள நல்ல பல திட்டங்கள் அவருக்கு தற்போது கை கொடுக்கும் வகையில் உள்ளது.

இதே போல் மிஸ்டர் க்ளீன் இமேஜ் சைதை துரைசாமியை வாக்காளர்கள் மத்தியில் அதிகம் பிரபலப்படுத்துகிறது. அணுகுவதற்கும் எளிமையான மனிதர் என்பதால் நடுத்தர குடும்ப வாக்காளர்கள் சைதை துரைசாமியை விரும்புகிறார்கள். இதோடு மட்டும் அல்லாமல் மனித நேய அறக்கட்டளை மூலமாக இளைஞர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக்குவதால் தொகுதியில் உள்ள இளைஞர்களின் ஒட்டு மொத்த ஆதரவும் சைதை துரைசாமிக்கே கிடைக்கும் என்பது கண்கூடாக தெரிகிறது. இது மட்டும் அல்லாமல் களப்பிரச்சாரம், சமூக வலைதளபிரச்சாரம், ஊடக பிரச்சாரம் என மூன்று பிரிவாக சைதை துரைசாமி டீம் செயல்பட்டு வருகிறது. இந்த முன்று டீமிலுமே மிகவும் அனுபவமிக்க மற்றும் செயல்திறன் மிக்கவர்கள் பணியாற்றுவது சைதாப்பேட்டையில் சைதை துரைசாமியை முன்னுக்கு கொண்டு வருகிறது.

பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியாக அவர் மக்களை சந்தித்து ஆதரவு கோரும் போது இயல்பாகவே மக்கள் எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்று கூறிவிடுகின்றனர். இதனால் இங்கு திமுக சார்பில் களம் இறங்கியுள்ள மா.சுப்ரமணியம் மறுபடியும் எம்எல்ஏ ஆவது கடினம் என்கிறார்கள். ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து தொகுதிக்கு மா.சுப்ரமணியத்தால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு தான் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்தது தான் காரணம்எ ன்று அவர் பிரச்சாரம் செய்வது பெரிய அளவில் எடுபடவில்லை. இதே போல் மா.சுப்ரமணியம் மீதான நில அபகரிப்பு வழக்கு அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2006 முதல் 2011 வரை சென்னை மேயராக இருந்த மா.சுப்ரமணியம் சிட்கோவில் தொழிலாளர் ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அவரது மனைவி காஞ்சனா பெயரில் மாற்றிக் கொண்டதாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக மா.சுப்ரமணியம் தனது மனைவி காஞ்சனாவுடன் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்திற்கு அலைந்து வருகிறார். தவிர சைதாப்பேட்டை குற்றவியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்மல் இருக்க மா.சுப்ரமணியம் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

அத்தோடு மா.சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது நில மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்கிற மா.சுப்ரமணியத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. எனவே நில மோசடி வழக்கின் விசாரணை முடிந்து விரைவில் சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இந்த வழககு தொடர்பான தகவல்கள் மற்றும் மா.சுப்ரமணியம் முன்ஜாமீனில் இருந்து தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்கிற தகவ்லகள் சைதாப்பேட்டை தொகுதியில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

கடந்த 2011 தேர்தலில் திமுக ஆட்சியை இழக்க காரணமாக அமைந்தது அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீதான நில அபகரிப்பு புகார்கள் தான். இந்த நிலையில் அப்படி ஒரு புகாரில் வழக்கை எதிர்கொண்டுள்ள மா.சுப்ரமணியம் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சென்னைமேயர் தேர்தலில் அதிமுக சார்பில் சைதை துரைசாமி களம் இறங்கியிருந்தார். அவருக்கு எதிராக அப்போதைய மேயரான மா.சுப்ரமணியம் திமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் சைதை துரைசாமி பெற்ற வாக்குகள் 12 லட்சத்து 40 ஆயிரம். சிட்டிங்மேயரான மா.சுப்ரமணியம் பெற்ற வாக்குகள் வெறும் 7 லட்சத்து 20 ஆயிரம்.

அதாவது கடந்த 2011ம் ஆண்டே மா.சுப்ரமணியத்தை அதுவும் சிட்டிங் மேயராக இருந்த மா.சுப்ரமணியத்தை சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவர் சைதை துரைசாமி.இதற்கு முக்கிய காரணம் அவரது மிஸ்டர் கிளீன் இமேஜ். அதே இமேஜ் தான் தற்போது சைதாப்பேட்டையிலும் அவருக்கு வெற்றியை தேடித்தரும் நிலையை உருவாக்கியுள்ளது எனலாம்.

click me!