தொட்டா உதிரும் வீட்டுக்கு ரூ.15 லட்சம் கணக்கா..? யாருங்க அந்த ஒப்பந்ததாரர்..? கடுகடுக்கும் கமல்ஹாசன்.!

By Asianet TamilFirst Published Aug 17, 2021, 9:16 PM IST
Highlights

தொட்டாலே உதிரும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு வீட்டுக்கு ரூ.15 லட்சம் கணக்கா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 

சென்னை அரும்பாக்கம் கூவம் ஆற்றோரமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் ஏராளமானோர் வசித்து வந்தனர். அந்தக் குடியிருப்புகளை காலி செய்த அரசு, அங்கு வசித்தவர்களுக்கு புளியந்தோப்பில் கே.பி.பார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. மொத்தம் 9 அடுக்குகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் 946 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த வீடு ஒதுக்கப்பட்டவர்கள் அங்கு குடியேறிவிட்டனர்.
ஆனால், இந்த அடுக்குமாடிக் கட்டிடம் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அங்கு வசிப்பவர்கள் புதிய வீடுகளில் உள்ள தூண்களில் பூசப்பட்ட சிமெண்ட் பூச்சுகள் கொட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் தரைதளம் ஓடு போன்று பெயர்ந்துகொள்வதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் கூறியிருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
அதில், “புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்க வேண்டும். மொத்தக் கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாகக் கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்” என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!