சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் உட்பட 3 வேட்பாளர்கள் ரூ.500 கோடி வரை செலவு செய்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில், ராமதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் உட்பட 3 வேட்பாளர்கள் ரூ.500 கோடி வரை செலவு செய்துள்ளனர் என்று கூறினார். இதனை வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் 82 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், பல கோடி ரூபாய், வேட்பாளர்கள் செலவு செய்துள்ளதாக கூறினார். தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிட்டப்பட்டுள்ளது என்றார்.
அது மட்டுமல்லாது, ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு பத்தாயிரம் ரூபாய் வழங்கும் பணி தற்போது வரை நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு முன்பாகவும், அதற்கு பின்பாகவும் நடைபெறும் பண விநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் தினகரன் மட்டும் ரூ.300 கோடி வரை செலவிட்டுள்ளதாகவும் ராமதாஸ் கூறினார்.