
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொந்த வேலை காரணமாகத்தான் டெல்லி சென்றுள்ளார் என அதிமுக இணை ஒருங்கிணபை்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிமுக கட்சியில் இருந்து கொண்டு பாஜவுக்கு அதிகளவு ஆதரவு தெரிவித்து பேசிய அமைச்சர்களில் முதலிடத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார். இதனிடையே, அதிமுக ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சொத்து குவிப்புக்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று அப்போது இருந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் 2 நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு காரணமாக, மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததுடன் வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட்டார். மேலும் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது, ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையும் துவங்கியுள்ளது. இதனால், பயந்துபோன ராஜேந்திர பாலாஜி அதிமுக தலைமை என்னை எந்த விதத்திலும் காப்பாற்றும் என்று தெரியவில்லை. இவர்களை நம்பி பிரச்னையில் சிக்குவதைவிட பேசாமல் பாஜகவில் இணைந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் கையில் திடீரென நேற்று காலை 11 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு சென்றார். அங்கு அவர் பாஜவின் முக்கிய தலைவர்களை சந்தித்த பிறகு பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜவில் இணைய போவதாக கூறுவது தவறான தகவல். அவரிடம் பேசினேன். அவர் அதிமுகவில் தான் தொடர்ந்து உள்ளார்.. ராஜேந்திர பாலாஜி சொந்த வேலை காரணமாகத்தான் டெல்லி சென்றுள்ளார். திட்டமிட்டு அவர் மீது அவதூறு செய்திகள் பரப்பப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.