
பசுமை வழிச்சாலை திட்டம் மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்தும், கூட்டங்கள் நடத்தியும் வந்த சமூக ஆர்வலரும் 'சேலமே குரல் கொடு' அமைப்பைச் சேர்ந்தவருமான பியூஷ் மானுஷை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
சென்னை டு சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழித்தடங்களைக் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆனால் இந்த வழித்தடத்தில் வனப்பகுதிகள், மலைப் பகுதிகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் இருப்பதால் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதே போன்று சேலம் மாவட்டத்தில் தனிப்பட்ட முறையில் குளங்களை பராமரிப்பது, மரங்களை வளா்த்து பசுமையை பெருகச் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக ஆா்வலா் பியூஷ் மானுஷ் உள்பட பலரும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் காமலாபுரம் பகுதியில் விமானநிலையம் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும். பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடிகர் மன்சூர் அலிகானை, பியூஷ் மானுஷ் கடந்த 3ஆம் தேதி அழைத்து வந்து பொதுக் கூட்டம் நடத்தினார்.
இதையடுத்து அரசுக்கு எதிராக பேசுதல், வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் பியூஸ் மானுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் மீது சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடைய நேற்று தீவட்டிப்பட்டி போலீசார் சென்னையில் மன்சூர் அலிகானை அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பியூஷ் மானுஷ் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஓமலூர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.