போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இனி ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும்.…. அதிரடி ஆர்டர் போட்ட பினராயி விஜயன் !!

First Published Jun 18, 2018, 11:15 PM IST
Highlights
kerala police department Orderly system demolished


உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் இனி எடுபிடி வேலைக்கு ஆள் கிடையாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் போலீஸ் உயர் அதிகாரி மகளால் தாக்கப்பட்ட போலீஸ் டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் ஆர்டர்லி முறை கேரளாவில் இன்றுடன் ஒழிக்கப்பட்டுள்ளது.

உயர் போலீஸ் அதிகாரிகளுக்குக் கார் ஓட்டுவது, உதவியாளராய் கூடவே இருப்பது, துணி துவைப்பது, துணிகளை அயர்ன் செய்வது, மார்க்கெட்டுக்குச் செல்வது, அதிகாரிகளின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துப் போய் வருவது போன்ற வேலைகளை செய்ய அரசால் நியமிக்கப்பட்டவர்கள்தான் ஆர்டர்லிகள் எனப்படுகிறார்கள்.  ஒருநாள் விட்டு ஒருநாள் பணி என்பதால்  பலர் ஆர்டர்லி வேலையை விரும்பி செய்வதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த ஆர்டர்லிகள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் அவ்வப்போது அவமானப்படுத்தப்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தைக் பொறுத்தவரை 5 ஆயிரம் ஆர்டர்லிக்கள்  உள்ளனர். இந்த முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநில போலீஸ் ஆயுதப்படை பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர் கவாஸ்கர் என்பவர் ‘ஆர்டலி’யாக பணி செய்துவந்தார். 

கார் டிரைவராகவும் ஏ.டி.ஜி.பி-யின் மனைவி மற்றும் மகளை திருவனந்தபுரம் நேப்பியார் மியூசியம் வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 14-ம் தேதி காலையில் நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். நடைப்பயிற்சி முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது அவர்களின் அருகே காரை கொண்டு செல்ல சற்று கால தாமதமானதால் கவாஸ்கரை கூடுதல் டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா திட்டியிருக்கிறார்.

 

தொடர்ந்து, கவாஸ்கர் காரை ஒட்டிச் சென்றபோதும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஸ்நிக்தா செல்போனால்  அவரை தாக்கியதில் கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட  கவாஸ்கர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து கவாஸ்கரின் மனைவி முதலமைச்சர்  பினராயி விஜயனைச் சந்தித்து புகார் அளித்தார். சுதேஷ்குமார், ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில்  அனைத்து போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் ஆர்டலிகளின் பட்டியல் மற்றும் வாகனங்களின் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, போலீஸ் துறையில் இருந்து இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு ‘ஆர்டர்லி’ (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என  முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

உயரதிகாரிகளின் வீடுகளில் கடைநிலை காவலர்களை வேலைக்கு அனுப்பும் பழக்கம் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. இழிவான இந்தப் பழக்கம் கேரள மாநிலத்தில் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

கட்டுப்பாடு என்னும் பெயரில் போலீஸ் துறையில்  மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது என்றும்  அரசின் உத்தரவை மீறி நடந்துகொள்ளும் உயரதிகாரிகள் யாரானாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பினராயி விஜயன் உறுதியளித்தார்.

click me!