தேசிய அளவில் கிளம்பிய எதிர்ப்புகள்.. மசிந்த மத்திய அரசு!!

First Published Jun 18, 2018, 5:41 PM IST
Highlights
prakash javadekar tweet about ctet examination


தேசிய ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாவது தாளை முன்பு இருந்ததுபோல, தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளும் மீண்டும் சேர்க்கப்பட்டு விட்டன  என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள் போன்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் இந்த தேர்வு நடக்க உள்ளது. 

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தனி தேர்வாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தனி தேர்வாகவும் நடத்தப்படுகிறது. 

இந்த தகுதி தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. முதல் தாளை ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய இருமொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். இரண்டாம் தாளை, முதல் தாளை எழுதிய மொழி அல்லாமல் வேறு மொழியில் எழுத வேண்டும். ஏற்கனவே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி, நேபாளி, பஞ்சாபி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 20 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம் என்றிருந்தது. 

ஆனால் இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளை தவிர மற்ற 17 மொழிகளும் நீக்கப்பட்டன. அதனால் முதல் தாளை ஆங்கிலத்தில் எழுதியவர்கள், இரண்டாம் தாளை இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் எழுத வேண்டிய கட்டாயம் உருவானது. இது முழுக்க முழுக்க இந்தியை திணிக்கும் செயல் என எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் இந்தி பேசாத மாநில தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்பட கூடிய சூழல் உருவானது. 

கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் முன்பு இருந்ததுபோல் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் தவிர மற்ற 17 மொழிகளிலும் அந்த தேர்வை எழுதலாம். இதற்கான உத்தரவை ஏற்கனவே பிறப்பித்து விட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  
 

click me!