
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பின், வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், பிரசாரம் தொடங்கிய நாட்களிலிருந்து வேற்று கிரகத்தில் இருந்தீர்களா. அரசியல் கட்சிகளும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம். வாக்கு எண்ணிக்கையின்போது தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்துள்ளது. கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் எந்த தேர்தல் கொண்டாங்களில் ஈடுபடக்கூடாது அனைத்து கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. குறிப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடுவது, இனிப்பு வழங்குவது உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களும் இருக்கக்கூடாது. மிகவும் அமைதியான முறையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை அனைத்து கட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.