பொள்ளாச்சி பாலியல் வீடியோ மர்மத்தோடு பெண் எஸ்.பி விவகாரம்... அதிமுகவை அதிரவைக்கும் டி.டி.வி...!

By Thiraviaraj RMFirst Published Apr 25, 2019, 5:25 PM IST
Highlights

பெண் எஸ்பிக்கு உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் பொள்ளாச்சி பாலியல் வீடியோ வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியம் காடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.  
 

பெண் எஸ்பிக்கு உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் பொள்ளாச்சி பாலியல் வீடியோ வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியம் காடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்த நிகழ்வு வெளியே வந்து தமிழகத்தையே உலுக்கியது. பெண் குழந்தையை பெற்ற தாய்மார்கள் நெஞ்சமெல்லாம் பதறியது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்த இந்தக் கொடுமை பற்றி வெளி உலகுக்கு தெரிந்து சில மாதங்கள் கடந்த பின்பும் இந்த வழக்கு எந்த திசையில் செல்கிறது இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது புரியாமல் இருக்கிறது. 

அரசியல் பின்புலம் காரணமாக உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க ஆரம்பத்தில் முயற்சிகள் நடந்தன, அதற்கு போலீஸ் உயரதிகாரிகள் சிலரும் துணை போனார்கள். இதனால் குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது. அந்த அடிப்படையிலேயே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நாற்பது நாட்களுக்கும் மேல் ஆகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று நடைமுறை இருந்தும்  மாவட்ட எஸ்.பி.,யே அந்தத் தவறை செய்தார்.

 

அதே தவறை தமிழக அரசும் செய்து சிபிஐக்கு விசாரணையை மாற்றிப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அதை திருத்தி புதிய அரசாணை வெளியிடுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் இந்த வழக்கை முறைப்படி சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணையை தொடர்வதில் ஏன் இத்தனை தாமதம் என்பது புரியவில்லை. 

மத்தியிலுல் மாநிலத்திலும், ஆளும் பிஜேபியும், அதிமுகவும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ  ஏற்க ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெரியவில்லை. அதுவரை இங்குள்ள சிபிசிஐடி போலீஸார் நடத்தி வரும் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதும் மர்மமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமின்றி அவர்களில் குடும்பதாருக்கும் உரிய நீதி கிடைக்காமல் எந்த மன உளைச்சலில் இருப்பார்கள் என்பதை நம்மால் உணரமுடிகிறது. ஆனால் அரசு இதைப்பற்றி கவலைப்படுகிறதா என்று தெரியவில்லை. 

தனக்கு மேல் உள்ள ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் எஸ்.பி ஒருவர் புகார் கொடுத்து ஓராண்டாகியும் அது தொடர்பாக ஒரு வழக்கைப் பதிந்து விசாரணை நடத்தாது மட்டுமின்றி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல் துறை உயர் அதிகாரியை பெயரளவில் கூட பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆர்வம் காட்டவில்லை. 

பெண்களின் பாதுகாப்பில் இந்த அரசு காட்டும் அலட்சியம் வன்மையாக கண்டிக்கத் தக்கது. பொள்ளாச்சி சம்பவத்திலும் இப்படி அலட்சியமாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயலாமல் தற்போது அந்த வழக்கின் விசாரணை யார் வசம் இருக்கிறது ? எந்த நிலையில் இருக்கிறது? சிபிஐக்கு மாற்றுவதில் என்ன நடைமுறை சிக்கல்? என்பதை எல்லாம் தெளிவுபடுத்தி, காரணம் எதுவாக இருந்தாலும் விரைவான விசாரணைக்கு இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

 இந்த வழக்கில் அரசியல் பின்னணிகள் இருப்பதால் சி.பி.ஐ நடத்தவுள்ள விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்தி விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை விரைவாக தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.  

click me!