2026-இல் பாமக ஆட்சி.. மக்கள் ஆதரவை பெற ராமதாஸ் போட்டுக்கொடுத்த திட்டம்.. செயல்படுத்த அதிரடி உத்தரவு.!

By Asianet TamilFirst Published Dec 7, 2021, 10:32 PM IST
Highlights

ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது ஆயிரம் பேர் இரு சக்கர ஊர்திகளில் கட்சி ரீதியிலான ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நமது கொள்கைகளையும் சாதனைகளையும் சொல்ல வேண்டும்.


 மக்கள் ஆதரவைப் பெற புதிய திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கட்சியினருக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 4-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், “வரும் 2026- சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான்  நமது இலக்கு ஆகும். இந்த இலக்கை அடைய நாம் அனைவரும்  கடுமையாக உழைக்க வேண்டும். எனவே, அனைத்து மாவட்ட செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும்; உங்களை விடக் கடுமையாக நானும் உழைப்பேன். அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவோம்.” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதையொட்டி ‘மக்களை சந்திப்போம்... மக்கள் ஆதரவை வெல்வேம்’ என்ற தலைப்பில் ராமதாஸ் மீண்டும் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.  அவர்களின் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களுக்கு கடந்த 4ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் தனித்தனியாக அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தேன். கடிதத்தை பெற்ற மாவட்ட செயலாளர்களில் சிலர், அந்தக் கடிதத்தில் நான் கேட்டுக் கொண்டிருந்தவாறு கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் பலர் அந்தப் பணியை தொடங்கவில்லை. அவர்களும் அடுத்த ஓரிரு நாட்களில் மக்களை சந்திக்கும் பணியைத்  தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அனைவரின் செயல்பாடுகளையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பாராட்டுகளும், செயல்படாதவர்களுக்கு கண்டிப்புகளும் உறுதி. யாரையும் கண்டிக்க வேண்டிய தேவை எழக்கூடாது என்பதே என் விருப்பம்.

டிசம்பர் 4ஆம் தேதிக்கு பிறகு பல மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பதவி கிடைப்பதற்கு முன்பே அந்தக் கடிதத்தை படித்திருக்கக்கூடும். படித்தவர்கள் அந்தக் கடிதத்தில் உள்ள அம்சங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள். படிக்காதவர்கள் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அக்கடிதத்தை படித்து அதில் உள்ள விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு புதிய மாவட்ட செயலாளர்களும் மக்கள் சந்திப்பைத் தொடங்குங்கள். மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட பணி நமக்கு காத்திருக்கிறது. கட்சி அமைப்பு ரீதியான ஒன்றியங்களில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்துவதுதான் நமது அடுத்தக்கட்ட பணி. நமது  கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒன்றியம் என்பது 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது ஆயிரம் பேர் இரு சக்கர ஊர்திகளில் கட்சி ரீதியிலான ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நமது கொள்கைகளையும் சாதனைகளையும் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அங்குள்ள மக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவைத் திரட்டுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.


 
ஒன்றிய அளவிலான இரு சக்கர ஊர்தி பேரணியை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் நானே நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளேன். மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். இது தொடர்பான அறிவிப்பை கட்சித் தலைமை விரைவில் வெளியிடும். அதற்காகக் காத்திருங்கள்.
 இரு சக்கர ஊர்திப் பயணம் மேற்கொள்வோம்! இளைஞர் சக்தியை ஒன்று திரட்டுவோம்!! மக்களை சந்திப்போம்.... அவர்களுடன் உரையாடுவோம்!!! மக்கள் ஆதரவை வெல்வோம்.... புதியதோர் தமிழகம் படைப்போம்!!!!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!