இனி ஆண்டு தோறும் சொத்து வரி உயர்வா..! வாக்குறுதியை மீறிய திமுக..? அலறித் துடிக்கும் ராமதாஸ்

By Ajmal KhanFirst Published May 10, 2022, 12:18 PM IST
Highlights

ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் கே என் நேரு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசு

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில்,  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது..நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 25 சதவீதமும், அதிகபட்சமாக 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் 25 சதவீதமும், அதிகபட்சம் 150 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏனைய மாநகராட்சிகளிலும் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்து உத்தரவு வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. 

சொத்து வரி உயர்வு- திணறும் மக்கள்

இந்தநிலையில் ஆண்டு தோறும் சொத்து வரி  உயர்வு தொடர்பான அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரியை ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்த வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிறது. சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது! என கூறியுள்ளார்.  சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் அண்மையில் தான் 200%  வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதையே செலுத்த முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு இத்தகைய சுமையை தமிழ்நாட்டு மக்களால் சுமத்த முடியாது! என கூறியுள்ளார்.

சொத்து வரி உயர்வு அறிவிப்பு- கை விட வேண்டும்

மேலும் 2017-18 ஆம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்ட போது அதைக் கண்டித்து இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமையேற்று போராட்டம் நடத்தினார். அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கும் போது  ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்துவது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை (வாக்குறுதி 487) சொத்துவரி உயர்த்தப்படாது என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. பொருளாதார நிலையை காரணம் காட்டி மக்களுக்கான உரிமைகளை மறுக்கும்  அரசு வரியை மட்டும் உயர்த்துவது சரியா? என கேட்டுக்கொண்டவர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் மீது மேலும், மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது.  அதனால், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு  கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!