
பேருந்து கட்டண உயர்வால் கதிகலங்கிக் கிடக்கிறது கிடக்கும் எடப்பாடி அரசு. மக்கள் மத்தியில் சரிந்துக் கிடக்கும் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் உடைத் தெறியவும் முதல்வர் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்களாம்.
“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர்சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யலாமா என திடீர் ஆலோசனை நடத்தத் தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வரான பன்னீர்செல்வத்திடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி. சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்தால் நல்லது என நினைக்கிறேன். இது சம்பந்தமாக பேச அதிகாரிகள் சிலரை வரச் சொல்லி இருக்கிறேன். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அவர்களை விடுதலை செய்தால், நிச்சயமாக மக்களிடம் நல்ல பேரு கிடைக்கும்...’ என சொன்னாராம். அதன் பிறகு சில அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து விளாவாரியாக முதல்வரிடம் பேசிய அதிகாரிகள், ‘இதற்கு முன்பாக முதல்வர்களாக இருந்த இரு பெரும் ஜாம்பவான்களான கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இப்படியான முடிவை ஒருமுறை கூட யோசிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இருவரும் நினைத்திருந்தால், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்திருக்க முடியும். பேரறிவாளனை பரோலில் விடக் கூட அவர்கள் தைரியமான முடிவை எடுக்கவில்லை. காரணம், அவர்களுக்கு நிறைய தயக்கம் இருந்தது.
ஆனால், நீங்கள் அதையெல்லாம் உடைத்து, பேரறிவாளனை பரோலில் வர அனுமதி கொடுத்தீங்க. அதுவே உங்க மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியது. உங்களைப் போன்ற ஒரு எளிமையான முதல்வரால் மட்டுமே இது சாத்தியமாகும்’ என மக்களே பேசினார்கள்.
இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் நீங்கள் விடுதலை செய்து உத்தரவிட்டால், சில எதிர்ப்புகள் வந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அதுமட்டுமல்ல அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய சம்பவமாக அது அமையும். அதேபோல, ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ இருந்த நெருக்கடி உங்களுக்கு இல்லை.
அதனால், நீங்கள் தைரியமாக இந்த முடிவை எடுக்கலாம். அப்படி அவர்களை நீங்கள் விடுதலை செய்யும் பட்சத்தில், அது அரசியல் சாசன சர்ச்சையாக உருவெடுத்தாலும் அடுத்து வரப்போகும் தேர்தலில் உங்களுக்கான செல்வாக்கு ஏறு முகத்தில் இருக்கும்.’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இதை நீங்கள் செய்தால், தமிழ் அமைப்புகளும், தமிழ் தேசியவாதிகளும் உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். தமிழர்களின் முதல்வர் என்ற பெயரும் மக்கள் மத்தியில் கிடைக்கும். அடுத்து உள்ளாட்சி தேர்தல் வந்தால், அந்த உணர்வு தனக்கு கைகொடுக்கும் என தைரியம் கொடுத்தார்களாம்.
அதற்கு முதல்வர், ‘இதனால் எனக்கு பல சிக்கல் வரும் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நீங்க சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்க்கும் போது, உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக எல்லோரையும் விடுதலை செய்ய முடியவில்லை என்றாலும், பேரறிவாளனை மட்டுமாவது விடுதலை செய்யலாமா என யோசிக்கிறேன். நானும் துணை முதல்வரும் இது சம்பந்தமா பேசுறோம். நிச்சயம் நல்ல முடிவாக எடுக்கிறோம்’ என சொன்னாராம் எடப்பாடியார்.
எடப்பாடி மட்டும் இப்படி செய்தால், அரசியல் சாசன சர்ச்சையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக முடிவெடுத்து தனது செல்வாக்கை உயர்த்த எடப்பாடி மற்றும் பன்னீர் இதை செய்தே தீர வேண்டும் என உறுதியாக இருப்பதாக பேசப்படுகிறது.