
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அமைதிப் பூங்காவாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் மாநிலமாகவும், மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கும் மாநிலமாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இது அனைத்தும் சீர்கெட்டு இருந்தது என்பது மக்கள் மறந்துவிடக்கூடாது என வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் திருமங்கலத்தில் உள்ள அனைவருக்கும் அம்மா வீட்டுமனை திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். பயிர் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என ஒரே ஆண்டில் இரண்டு முறை தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர் எளிய முதலமைச்சராக விளங்கி கொண்டிருக்கிறார்.
திருமங்கலத்தில் ஐந்து ஆண்டுகளில் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை என்னால் உணர முடிந்தது. அதே போல நானும் சுற்றி சுற்றி திருமங்கலம் தொகுதியில் வந்துள்ளேன். இந்த ஐந்து வருடங்கள் நான் உங்களை விட்டுப் பிரியாமல் இருந்துள்ளேன். வைரஸ் காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொது மக்களை சந்திக்கவும் இல்லை, அவருடைய கட்சியினரும் பொது மக்களை சந்திக்கவில்லை. எங்களைப் போன்று நிவாரண உதவிகளை வழங்கவில்லை. ஆனால் நாங்கள் அனைத்தும் செய்துள்ளோம். அதனடிப்படையில் அதன் நம்பிக்கையோடு நாங்கள் களத்தில் உங்களைச் சந்திக்க வருகை தந்துள்ளோம்.
வைரஸ் காலகட்டத்தில் எங்கள் உயிர் முக்கியம் அல்ல திருமங்கலம் தொகுதி மக்களின் உயிர் தான் முக்கியம் என்று கருதி களத்தில் நான் நிரூபித்துக் காட்டுகிறேன். வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல உங்களை வாழ வைப்பதற்காகவும் நான் பலமுறை இந்த தொகுதிக்கு தினந்தோறும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். விலை இல்லாமல் ஒரு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் தருகிறேன் என்று தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு தந்துள்ளார். இப்படி ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்று சொன்னால் அது தமிழகத்தின் முதலமைச்சர் மட்டுமே.
முதியோர் ஓய்வூதியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 500 ரூபாய் மட்டுமே இருந்தது, அதை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி காட்டியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்சமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 1500 ரூபாய் தருவேன் என்று சொல்லியுள்ளார். தற்சமயம் மக்களைப் பாதுகாப்பதற்காக அமைதிப் பூங்காவாக தமிழகம் உள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தங்குதடையின்றி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆட்சியின் பொழுது என்ன நடந்தது என்பதை அதன் தலைவர் ஸ்டாலின் உணர்ந்து பொது மக்களை சந்திக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை, தாய்நாட்டு தமிழ் மக்களை உங்களால் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் முதலமைச்சர் பழனிசாமி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல் இரவு பகல் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக உறக்கமில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.