ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்; நாம் தமிழர் கட்சி தம்பிகளால் பரபரப்பான நீதிமன்ற வளாகம்

By Velmurugan sFirst Published Sep 11, 2023, 12:07 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேனகா நவநீதனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 13-ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. 

இதில் சீமான் பேசுகையில், அருந்ததியர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, பிரசார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 வருட காதல் கம்பி நீட்ட பார்த்த காதலனை காவலர்கள் துணையுடன் கரம் பிடித்த இளம்பெண்

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று  ஆஜராகும்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்த சீமானிடம் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் கடந்த 2ம் தேதி இந்த சம்மனை வழங்கினர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் அரசுக்கு பணம் மிச்சமாகும்; ராமதாஸ் பேட்டி

இதனை அடுத்து தற்போது சீமான் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், பொறுப்பு நீதிபதி மாலதி முன்பு விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்பகுதியில் அதிக அளவில் திரண்டுள்ளனர். தொடர்ந்து, காவல் துறையினர் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்கு அதிக அளவில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நீதிமன்ற வளாகம் மிகுந்த பரபரப்புடன் காட்சி அளிக்கிறது.

click me!