எதிர்வரக்கூடிய சட்டப் பேரவை தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிடமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
எதிர்வரக்கூடிய சட்டப் பேரவை தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிடமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்பு இருந்ததுபோல் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டுவருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் இதே கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவிட்டுள்ளது என்றும்,
வாக்கு பதிவு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. அதனால், மீண்டும் வாக்கு சீட்டு முறை கொண்டுவர வாய்ப்பில்லை என்றார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த காரணத்தால், இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.