மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 200 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 336 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் பாஜக அரசு அமைந்தது.
ஆனால் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பல நடவடிக்கைகள் மோடி அரசுக்கு பின்னடைவை தந்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், போன்ற மாநில கட்சிளும் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக பெரும்பாலான எதிர்கட்சிகள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகளை சந்திர பாபு நாயுடு மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளிள் கூட்டம் அவர்களுக்கு பூஸ்ட்டாக இருந்தது.
இந்நிலையில் டெகான் ஹெரால்டு என்ற ஆங்கிலப் பத்திரிக்கை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்து தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும் அரசு அமைப்பதில் மாநில கட்சிகள் பெரும் பங்கு வகிப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 180 முதல் 200 தொகுதிகள் கிடைக்கும், அதிக பட்ச சீட்களை காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ணி 160 முதல் 175 சீட்டுகளை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த முறை தனித்து 336 இடங்களைக் கைப்ற்றிய பாஜகவுக்கு எதிர்வரும் தேர்தல் பெரும் பின்னடைவைத் தரும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் அந்தந்த மாநிலங்களில் உள்ள தெலுங்கு தேசம், டிஆர்எஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி.தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி போன்ற கட்சிகள் 160 முத்ல் 180 சீட்களை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.
ஆட்சி அமைக்க தேவையான 272 சீட்களும் யாருக்கும் தனியே கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அதனால் தொங்கு நாடாளுமன்றமே அமையும் எனவும் அநத் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அதனால் அடுத்த அரசு அமைப்பதில் மாநில கட்சிகள் பெரும் பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.