போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Aug 10, 2022, 9:27 PM IST
Highlights

போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது பற்றிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது பற்றிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் போதை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதை அடுத்து போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதில் பேசிய மு.க.ஸ்டாலின், இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதை பொருட்கள் உள்ளது. போதை பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள்.

இதையும் படிங்க: நீல வண்ண கடல் மூவர்ணம் ஆனது… தேசிய கொடியுடன் கடலில் படகு பேரணி சென்ற அண்ணாமலை!!

தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கி விடுகிறார்கள். இது அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியை தடுத்து விடுகிறது. எதிர்காலத்தை பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமுதாயத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது. போதை பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் பேதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக இதுவரை கூட்டம் கூட்டி உள்ளோம். இப்போது முதன் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கூட்டம் கூட்டி உள்ளோம். போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தாக வேண்டும். போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும். அதை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். போதை பொருள் பயன்படுத்துபவர்களை போதையின் பாதையில் செல்லாமல் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

இதையும் படிங்க: கனியமூர் பள்ளிக்கூட கலவரத்தில் சாதியின் பெயரால் தலித்துகள் கைது.. திருமாவளவன் கொந்தளிப்பு.

இதற்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட மகாராஷ்ராவை விட தமிழ்நாட்டில் குறைவுதான் என்று சொல்வதில் நான் சமாதானம் அடைய தயாராக இல்லை. உடலுக்கு கெடுதியானது போதைப்பொருள். அதனால் கெடுதல் என்ற பொருளில் நான் சொல்கிறேன். போதை என்பது தனிமனித பிரச்சினை அல்ல. சமூக பிரச்சினை. இதை தடுத்தாக வேண்டும். போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். ஒருசேர சமூகம் இயங்கினால்தான் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் செயல்பட முடியும். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நீங்கள் பாடுபட வேண்டும். ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள். போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!