
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டாம் என்று பொன்முடி தவிப்பது ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் எனக்கு அடுத்து பேசுவதற்காக கவுரவ விருந்தினர் ஒருவரை அழைத்து பேச வைக்கவுள்ளனர். இதுவேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். இவற்றை பார்க்கும்போது, பல்கலைக்கழகங்களிலே மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் எங்களுக்கு வருகின்ற காரணத்தால், நான் ப்ரோ சான்சலர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, அதில் கலந்துகொள்வதாக இல்லை" என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- உயர் கல்வித்துறையிடம் ஆலோசனை நடத்தாத ஆளுநர்..! பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த தமிழக அரசு- பொன்முடி ஆவேசம்
உயர் கல்வித்துறை அமைச்சருக்கு பல்கலைக்கழகங்களின் அமைப்பு குறித்து தெரியவில்லையோ என தோன்றுகிறது. முடிவெடுப்பது ஆளுநராக அல்ல, பல்கலைக்கழக வேந்தராக என்பதை அறியாமல் பேசுகிறார். கௌரவ விருந்தினர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் என்பது தெரிந்தே அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார் என்று சந்தேகமாக உள்ளது. முருகன் அவர்கள் சட்டம் படித்தவர். சட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பட்டியிலன சமுதாயத்தின் நலனிற்காக அல்லும் பகலும் உழைப்பவர். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக சிறப்பாக பணியாற்றியவர்.
இதையும் படிங்க;- ஆர்எஸ்எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி.. போட்டு தாக்கும் திருமாவளவன் ..!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அவரை பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டாம் என்று பொன்முடி அவர்கள் தவிப்பது ஏன்? தனக்கு அடுத்து எல்.முருகன் அவர்கள் பேசுவதை கௌரவ குறைவு என்று அமைச்சர் எண்ணுகிறாரா?". சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திமுகவுக்கு இந்த விவகாரத்தில் சகிப்புத்தன்மை இல்லாமல் போவது ஏன்? முருகன் அவர்களை புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? வேந்தர் அவர்கள் ஒவ்வொரு பல்கலைக்கழக விழாக்களிலும் ஒழுக்கம், நன்நெறி, கட்டுப்பாடு, போன்றவைகளை மாணவர்களிடத்தில் பேசுவதை அமைச்சரால் தாங்கி கொள்ள முடியாது போனதால் புறக்கணிக்கிறாரோ? என்று
நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.