உத்தர பிரதேசத்தில், கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ''பசு, ஓம் போன்ற வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு, பயத்தில் முடி சிலிர்த்து விடுகிறது என கிண்டலாக பேசினார்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச , மாநிலம், மதுராவுக்கு வந்தார்.
அப்போது சுகாதாரமே சேவை, கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டம், கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் மையம்' உள்ளிட்ட பல திட்டங்களை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி , ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு, தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 2022க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், முற்றிலும் ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.
பசு, ஓம் ஆகிய வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு பிடிக்கவில்லை. இந்த வார்த்தைகளை கேட்டதுமே, அதிர்ச்சியில், அவர்கள் முடி சிலிர்க்கிறது.
இது போன்ற வார்த்தைகளை கூறி, நாட்டு மக்களை, 16ம் நுாற்றாண்டுக்கு மத்திய அரசு அழைத்துச் செல்வதாக சிலர் கூறுகின்றனர். கால்நடைகள் இல்லாமல், கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய வைக்க முடியுமா; இதற்கு, யாரிடமாவது பதில் உள்ளதா? என பிரதமர் கேள்வி எழுப்பினார்.