உ.பி.யில் மீண்டும் மேஜிக் நிகழ்த்தும் மோடி - அமித்ஷா - யோகி கூட்டணி... புதிய கருத்துக்கணிப்பில் சரவெடி தகவல்.!

By Asianet TamilFirst Published Nov 17, 2021, 10:57 PM IST
Highlights

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதேபோல பாஜக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் என்றாலும், கடந்தத்தேர்தலைவிட சுமார் 70 -  90 தொகுதிகளை இழக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிப்ரவரியில் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 317 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதற்கிடையே கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள் துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார். இதற்காக பாஜக சார்பில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை அமித்ஷா நடத்தி வருகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் அக்கட்சியும் இப்போதே தேர்தலுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இன்னொரு முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியும் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வியூகங்களை வகுத்து வருகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. இந்நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் உ.பி.யில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 239 முதல் 245 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மெஜாரிட்டிக்கு 202 எம்.எல்.ஏ.க்களே போதும் என்ற நிலையில், பாஜக போதுமான மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி 119 முதல் 125 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்புக் கூறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 28 - 32 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 5 - 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதேபோல பாஜக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் என்றாலும், கடந்தத்தேர்தலைவிட சுமார் 70 -  90 தொகுதிகளை இழக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த முறையைப் போலவே போல் இந்த முறையும் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்கணிப்பு மூலம் பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா - முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டணி மேஜிக் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

tags
click me!