பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிவருகிறது தமிழக அரசு.
அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது.
இதையும் படிங்க.. AIADMK : பாஜக வேண்டாம்.. கதறிய சீனியர்கள்! கடுப்பான எடப்பாடி பழனிசாமி - அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?
அந்த ஆலோசனைக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து இதுதொடர்பாக அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி பேசினர். அப்போது, பொங்கல் பண்டிகைக்கு அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய் ரொக்க பணம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை விநியோகம் செய்வதற்கான டோக்கன் டிசம்பர் 30,31ஜனவரி 2,3,4 ஆகிய 5 நாட்கள் வழங்கப்படும்.
டோக்கன் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள்,வயதானவர்கள்,ரேஷன் கடைக்கு நேரில் வர முடியாதவர்கள், கைரேகை வைக்க முடியாதவர்கள்,தங்களுக்கு மாற்றாக யார் ரேஷன் கடைக்கு செல்கிறார்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்துவிட்டால் மாற்று நபரிடம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாங்குவதற்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இந்திய உணவு கழகத்தின் மூலம் ஆந்திரா,தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய அரிசியில் பற்றாக்குறை இருப்பதால் கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
பொங்கல் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற வேண்டும் என்று முதல்வர், மூத்த அமைச்சர்கள் தலைமை செயலாளர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி அதற்குப் பிறகு தான் ரொக்கப்பணம் ரூ.1000 ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது, எனவே பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறுவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா