
குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் ரூ.250 கோடி அளவுக்க சட்டவிரோதமாக குட்கா வர்த்தகம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவரங்கள் வெளியாகின.
போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் டி.ஜி.பி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையர்களாக பணியாற்றியவர்களும் லஞ்சம் பெற்றதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருர் பதவி விலக வேண்டும் அல்லது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.