முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு இவரு தான்.. நிகழ்ச்சியில் அமைச்சர் சொன்ன ரகசியம்…

By manimegalai aFirst Published Oct 28, 2021, 7:49 AM IST
Highlights

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு செய்தித்தாள்களில் அதிகம் வருவது அமைச்சர் சேகர்பாபு தான் என்று மற்றொரு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டி உள்ளார்.

திருவண்ணாமலை: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு செய்தித்தாள்களில் அதிகம் வருவது அமைச்சர் சேகர்பாபு தான் என்று மற்றொரு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டி உள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆய்வு நடத்தி வருகிறார்.

கோயில் நிலங்களில் எங்கு எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதோ அவற்றை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார். தினசரி அனைத்து செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் ஒரு செய்தியாவது இவரது செயல்பாடுகள் பற்றி வெளியாகிவிடும்.

இந்நிலையில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு செய்தித்தாள்களில் அதிகம் வருவது அமைச்சர் சேகர்பாபு தான் என்று மற்றொரு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டி உள்ளார். திருவண்ணாமலையில் இந்த சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிகழ்ச்சிகளில் பொதுப்பணித்துறை அமைச்சரான எ. வ. வேலுவும் கலந்து கொண்டார். ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

அதில் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: தமிழகத்தில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிகம் முறை செய்தித்தாள்களில் இடம்பெறுவது சேகர்பாபு பெயர் தான். அவரின் உழைப்பு அந்தளவிற்கு இருக்கிறது.

ஒரு கோரிக்கை இவரிடம் விடுத்தால் போதும், 48 மணி நேரத்தில் உடனடியாக செய்து முடித்துவிடுகிறார். நமது எம்எல்ஏக்கள், கோரிக்கைகள் விடுத்தால் உடனடியாக ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்.

என்னிடம் ஒரு கோரிக்கை வந்தால் அது பற்றி தெரிந்து கொண்டு நிறைவேற்ற குறைந்தது 15 நாட்கள் ஆகிறது. ஆனால் இவரோ 48 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்.

இந்த தருணத்தில் நான் கோரிக்கைகளை சொல்ல சொல்ல, உள்துறை செயலாளரிடம் அதை நிறைவேற்ற முடியுமா? முடியாதா எனறு கேட்டுக் கொண்டும் விவாதித்து கொண்டும் இருக்கிறார் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் எ.வ. வேலு.

click me!