
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். ஆதரவளித்தால் ஏற்கத் தயார் என்று தீபா தெரிவித்துள்ளார்..
காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் குதிப்பதற்கான முஸ்தீபுகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சார்பில் தீபாவும் பரபரப்பில் சற்று விறுவிறுப்பு கூட்டியுள்ளார். தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னை தியாகராயநகரில் இன்று மாலை தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார்
அப்போது பேசிய அவர், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் உள்ள அதிமுகவுடன் இணைந்து செயல்படமாட்டேன். அந்த சதிகாரர்களை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தேர்தலில் அவர்கள் டெபாசிட் இழப்பது உண்மை.திமுகவின் ஆதரவை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அளித்தால் அதனை ஏற்றுக் கொள்வேன்.
தொடர்ந்து பேசிய அவர், " ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவதே எனது எதிர்காலத் திட்டம். ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களை நான் ஆரம்பம் முதலே வெளிப்படுத்தி வந்துள்ளேன். மரணம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற வரலாறை உடைத்தெறியும் விதமாக ஆர்.கே. நகரில் மக்கள் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன்.இவ்வாறு தனது பேட்டியில் தீபா தெரிவித்துள்ளார்.