
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் யார் வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும் என்பது குறித்த நேர்காணல் மார்ச் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. இதனால் இங்கு இடைத்தேர்தல் எப்போது வரும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் அதற்கான மனுதாக்கலை மார்ச் 16 ஆம் தேதி முதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் எப்படியாவது கால் பதித்துவிட விரும்பும் ஸ்டாலின் அதற்கான வேலைபாடுகளில் இறங்க ஆரம்பித்து விட்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்ப கட்டணமாக 25,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை கழகத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.