
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
5 மாநில தேர்தல்கள் மோடி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், 3 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றும் என்று ஆங்கில ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசம் (403 தொகுதிகள்)
உத்தரப்பிரதேசத்தில் 190 முதல் 210 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி 120 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 78 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் (70 தொகுதிகள்)
உத்தரகாண்டில் 42 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் இழுபறி நீடித்தாலும் இறுதியில் பா.ஜ.க.வின் வசமே வெற்றி சென்றடையும் என்றும் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் காங்கிரஸ் 60 ல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது
ஆம் ஆத்மிக்கு 50 இடங்களும் அகாலிதளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.மணிப்பூர் தேர்தல் முடிவுகள் குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை....