மெர்சல் திரைப்படத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜனுக்கும் எச்.ராஜாவுக்கும் விஜய் உட்பட படக்குழு நன்றி சொல்ல வேண்டும் என தினகரன் கிண்டலாக கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிரான தவறான கருத்துக்கள் வசனங்களா இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதிலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரின் குரல் சற்று ஓங்கி ஒலித்தது. அனைவருக்கும் ஒருபடி மேலே போய், விஜய் மீது மதரீதியான தாக்குதலைத் தொடுத்தார் எச்.ராஜா.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மெர்சல் திரைப்பட சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்தார். மெர்சல் என்ற தமிழ்ப் படத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்தியதற்காக தமிழிசை சவுந்தரராஜனுக்கும் எச்.ராஜாவுக்கும் மெர்சல் படக்குழு நன்றி தெரிவிக்க வேண்டும் என கிண்டலாக கூறினார்.
மக்களைப் பாதிக்கிற விஷயங்களைத்தானே மெர்சல் படத்தில் பேசியிருக்கின்றனர். அது பாஜகவினருக்கு பிரச்னை என்றால் படக்குழுவை அழைத்து பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்து மிரட்டல் விடுத்திருப்பது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.