
ஊழல் மூலம் தமிழகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் , கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளித்த விவகாரத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த காசி தர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள கந்து வட்டிக் கொடுமை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் இசக்கிமுத்து ரூ.1.30 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2.30 லட்சம் செலுத்திய பிறகும் அவரிடம் கூடுதல் வட்டி கேட்டு கந்து வட்டிக்காரர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தான் இசக்கி முத்துவும் அவரது குடும்பத்தினரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.
கந்து வட்டியால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதால் தான் 14.11.2003 அன்று தமிழகத்தில் கந்து வட்டித் தடை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
கந்து வட்டிக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையிடம் இசக்கி முத்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரையே காவல்துறை மிரட்டியுள்ளது. அதன்பிறகும் தம்மைக் காப்பாற்றும்படி மாவட்ட ஆட்சியரிடம் இசக்கிமுத்து 6 முறை புகார் அளித்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேபோல், கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக செயல்பட்டு இசக்கிமுத்துவை மிரட்டிய காவல்துறையினர் கந்துவட்டிச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். இத்தகையக் கொடுமைகளை கண்டும் காணாமல் ஊழல் மூலம் தமிழகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இசக்கி முத்து குடும்பத்தின் தீக்குளிப்புக்குக் காரணமாக கந்துவட்டிக்காரர், காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், இசக்கி முத்து உள்ளிட்ட நால்வருக்கும் 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் நால்வருக்கும் பாளை மருத்துவமனையில் தரமான மருத்துவம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.