" நெல் கொள்முதலில் மெகா கொள்ளை... மௌனம் காக்கும் மந்திரிகள் " மநீம பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 20, 2021, 11:40 AM IST
Highlights

செல்லும் இடங்களில் எல்லாம் எத்தனை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என பட்டியலிட்டு மார்தட்டும் முதல்வர் அவர்கள், இதையும் அவருடைய சாதனை பட்டியலில் சேர்த்து விட்டாரா என்ன?  டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள்,

விவசாயிகளிடம் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா? என மக்கள் நீதி மையம் தலைவர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. " நெல் கொள்முதலில் மெகா கொள்ளை, மௌனம் காக்கும் மந்திரிகள்"  என்ற தலைப்பில் மக்கள் நீதி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- விவசாயிகள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட கட்சியான மக்கள் நீதி மையம், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் என்பது நியாயமான முறையில், நேர்மையான வழியிலும் நடைபெற வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆட்சியாளர்கள்தான் மாறுகிறார்களே தவிர நெல் கொள்முதல் ஊழல் குறைந்தபாடில்லை. ஏற்கனவே உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து வரும் தமிழக விவசாயிகள், கொள்முதல் நிலையங்களில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளால் உழக்கு அல்ல முதலீடு கூட மிஞ்சாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்: கல்யாண ராமனை கைது செய்தபோது, வாரண்ட் கேட்டு போலீசை தெறிக்கவிட்ட பாஜக பெண் .. காவல் ஆணையரகத்தில் கதறல்.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் கொள்ளை குறித்து பசுமை விகடன் இதழ் விரிவான செய்தி தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நெல் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் அளிக்கவேண்டிய லஞ்சப் பணம் பற்றிய விவரங்கள் துள்ளியமாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 500 கோடி ரூபாய் வரை ஊழல் லஞ்சம் முறைகேடுகள் நடைபெறுவதாக அந்த இதழ் குறிப்பிடுகிறது. சென்ற ஆண்டை விட தற்போது லஞ்ச தொகை கூடி இருப்பதை சுட்டிக்காட்டும் அந்த இதழ், இதை முற்றிலும் ஒழிக்க தயாரா என்ற சவாலையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நோக்கியே முன்வைத்துள்ளது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட முன்னணி இதழ் இத்தகைய சவால்களை வைத்திருக்கும் நிலையில், மாண்புமிகு முதல்வரோ, மாண்புமிகு அமைச்சர்களோ இதுகுறித்து எந்த பதிலும் அளித்ததாக தெரியவில்லை. டெல்டா பகுதி விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து விட்டு இப்போது இந்த பிரச்சனையில் முதல்வரும் அமைச்சர்களும் மவுனம் சாதிப்பது நல்லதல்ல. 

இதையும் படியுங்கள்: அடி தூள்.. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வழிகாட்டும் முதல்வர் ஸ்டாலின்.. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர்.

செல்லும் இடங்களில் எல்லாம் எத்தனை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என பட்டியலிட்டு மார்தட்டும் முதல்வர் அவர்கள், இதையும் அவருடைய சாதனை பட்டியலில் சேர்த்து விட்டாரா என்ன? டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள், வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்று புகழ்கிறார்கள், அதேசமயம் தமிழக விவசாயிகளை அன்றாடம் வஞ்சிக்கும் செயல்களை செய்கிறார்கள். அது பற்றி கிஞ்சித்தும் குற்ற உணர்ச்சியை இன்றி நடமாடுகிறார்கள். இப்போக்கு இன்று நேற்று தோன்றியதல்ல நீண்ட காலமாகவே தமிழக அரசியல் நிலை இதுதான். சமீபத்தில் ஒரு ஊடக நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊடகங்களில் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

சொன்னால் மட்டும் போதாது அதை செயலிலும் காண்பிக்க வேண்டும். அந்த வகையில் அந்த தனியார் இதழ் சுட்டிக்காட்டியுள்ளதை கவனத்தில் கொண்டு டெல்டா விவசாயிகளிடம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் இனி இதுபோன்ற கொள்ளை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!