மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஜனநாயகம் இல்லை..! கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்

By karthikeyan VFirst Published May 6, 2021, 6:51 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய பதவி வகித்த நிர்வாகிகள் பலர் விலகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 3.7 சதவிகித வாக்குகளை பெற்றது.

மக்களவை தேர்தலில் 3.7 சதவிகித வாக்குகளை பெற்றதால் மக்கள் நீதி மய்யத்தின் மீது தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய நிலையில், அக்கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் வெறும் 2.84 சதவிகித வாக்குகளை பெற்றது மக்கள் நீதி மய்யம் கட்சி. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்தார். கமல்ஹாசனே வெற்றி பெறாதது அக்கட்சியினருக்கு ஏமாற்றமாக அமைந்தது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், கட்சியில் தீவிர தேர்தல் பணியாற்றாதவர்கள் களையெடுக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், அப்படி கட்சி பணி சரியாக ஆற்றாத சிலர், தாங்கள் களையெடுக்கப்படலாம் என்பதையறிந்து, கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அவர்களாகவே வெளியேறியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி கட்சி பதவியிலிருந்து மட்டுமல்லாது, அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகியுள்ளார்.

அதேபோல கட்சியின் மற்றொரு துணை தலைவரான பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு, குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோரும் விலகியுள்ளனர்.
 

click me!