மகாராஷ்ட்ரா, அரியானாவில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் ? இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது !!

By Selvanayagam PFirst Published Oct 24, 2019, 7:53 AM IST
Highlights

மகாராஷ்ட்ரா  அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரியும். வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்குகிறது.

முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்ட்ரா மாநிலத்திலும், முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிற அரியானா மாநிலத்திலும் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் என்கிற வகையில் இந்த தேர்தல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி-சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

தேர்தல் களத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.

முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள்  பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர்  அஜித்பவார் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம் கட்சிகள் இடையேதான் முக்கிய போட்டி.
முதலமைச்சர்  மனோகர் லால் கட்டார் (பாரதீய ஜனதா), முன்னாள் முதலமைச்சர்  பூபேந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்), அபய் சிங் (இந்திய தேசிய லோக்தளம்), ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்பட 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மராட்டியம், அரியானா மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி இடைவிடாமல் நடைபெறுகிறது.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற பரபரப்பு நிலவுகிறது. அதே நேரத்தில் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக  ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பான்மையான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

click me!