நாங்குநேரியில் அதிமுக வெற்றி பெற்றால்... காத்திருக்கும் ட்விஸ்ட்... இபிஎஸ் - ஓபிஎஸ் அதிரடி முடிவு?

By Asianet TamilFirst Published Oct 24, 2019, 7:08 AM IST
Highlights

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்கள் நிறைந்திருக்கிறார்கள். மேலும் மாநிலம் முழுவதும் அவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.

  நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவு இன்று வெளியாகும் நிலையில், அந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால், நாடார் சமுதாயத்துக்கு அமைச்சர் பதவி தர அதிமுக  தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 நாங்குநேரி தொகுதியில்  நடைபெற்ற இடைத்தேர்தலில் சுமார் 66 சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் வெற்றியைத் தக்க வைக்க திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸும் மல்லுக்கட்டின. விக்கிரவாண்டி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ததுபோல காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தும் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இதேபோல முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர்.

 
இந்நிலையில் நாங்குநேரியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மதியம் 12 மணிவாக்கில் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்கும்பட்சத்தில் நாங்குநேரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு பிரநிதித்துவம் வழங்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்கள் நிறைந்திருக்கிறார்கள். மேலும் மாநிலம் முழுவதும் அவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.


நாங்குநேரி தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது, இந்த ஆதங்கத்தை நாடார் சமுதாயத்து தலைவர்கள் முதல்வரிடம் முன் வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் இரு இடங்கள் காலியாக உள்ளன. நாங்குநேரி தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும்பட்சத்தில் அந்தச் சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ரேஸில் ஸ்ரீருவைகுண்டம் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் முன்னணியில் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!