மீண்டும் மோடியுடன் பழம் விடப் போகிறாரா சிக்ஸர் சித்து..? சித்துவுக்கு கசந்துபோனதா காங்கிரஸ் கட்சி?

By Asianet TamilFirst Published Oct 24, 2019, 7:28 AM IST
Highlights

சித்துவின் மனைவி கவுருக்கு அமிர்தசரஸ் எம்.பி. தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. இதனால், அதிருப்தி அடைந்த சித்து மனைவி காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து சித்து ஒதுங்கியே உள்ளார். இந்நிலையில் பஞ்சாபில் பாஜகவை பலப்படுத்தும் வகையில் சித்துவை கட்சியில் சேர்க்க பாஜக திட்டமிட்டுவருகிறது. எனவே சித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் மீண்டும் ஐக்கியமாகப் போகிறார் என்ற தகவல் பஞ்சாபில் றெக்கைக் கட்டி பறக்கிறது.

பஞ்சாப் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் பாஜவில் சேரப் போவதாக தகவல்கள் றெக்கைக் கட்டி பறக்கின்றன. 
முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து 2004-ல் பா.ஜ.வில் சேர்ந்தார். அமிர்தசரஸ் தொகுதி பாஜக எம்.பி.யாக 2004, 2009 ஆண்டுகளில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவுக்காக தீவிரமாக பணியாற்றிவந்த சித்துவுக்கும் பாஜக தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2016-ல் பாஜகவிலிருந்து விலகினார். இதேபோல அவருடைய மனைவி நவ்ஜோத் கவுர் சித்துவும் பாஜவில் இருந்து விலகினார். பின்னர் ராகுலை  தலைவராக ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சித்து.


2017-ல் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்தது. மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், துணை முதல்வர் பதவியும் சித்துவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சித்துவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது. இதனையத்து முதல்வர் அமரீந்தர் சிங்குவுக்கும் அவருக்கும் மனக்கசப்பு இருந்துவந்தது. இந்நிலையில் சித்து வகித்து வந்த துறையை முதல்வர் அம்ரீந்தர் சிங் மாற்றினார். 
இதனால் கடுங்கோபடைந்த சித்து அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் சித்துவின் மனைவி கவுருக்கு அமிர்தசரஸ் எம்.பி. தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. இதனால், அதிருப்தி அடைந்த சித்து மனைவி காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து சித்து ஒதுங்கியே உள்ளார். இந்நிலையில் பஞ்சாபில் பாஜகவை பலப்படுத்தும் வகையில் சித்துவை கட்சியில் சேர்க்க பாஜக திட்டமிட்டுவருகிறது. எனவே சித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் மீண்டும் ஐக்கியமாகப் போகிறார் என்ற தகவல் பஞ்சாபில் றெக்கைக் கட்டி பறக்கிறது. 
ஆனால், இது பற்றி வாய் திறக்கவில்லை சித்து. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாக வரும் தகவல் வதந்தி என்றும், அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அவருடைய மனைவி கவுர் விளக்கம் அளித்துள்ளார். 

Latest Videos

click me!